May 30, 2013

வாழ்க்கை வாழ்வதற்கே..!!!

1 comment:


பள்ளியில் நடந்த ஒரு சுவையான சம்பவம்:

அது ஒரு தனியார் பள்ளி. அப்போது 9-வது படித்துக் கொண்டிருந்தோம். எல்லா பள்ளிகளிலும் இருப்பது போல மாணவர்கள் நாங்கள், எங்கள் படிக்கும் திறனுக்கு ஏற்றவாறு அமர வைக்கப்பட்டிருந்தோம். முறையே நன்றாக படிப்பவர்கள் முதல் வரிசைகளில், சுமாராகப் படிப்பவர்கள் நடு வரிசைகளிலும், ஏனைய மாணவர்கள் கடைசி வரிசைகளில் அமர்த்தப்பட்டோம்.

 
எனது நண்பன், படிப்பில் பின்தங்கி இருந்தாலும், மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம். அவனது வார்த்தை விளையாட்டுக்கும், சேட்டைகளுக்கும் எங்களில் ஒரு ரசிகர் வட்டமே இருந்தது. சுருக்கமாக அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை. என்னதான் அனைத்து விஷயங்களிலும் சுட்டியாக இருந்தாலும் படிப்பு வராதவன் என்ற முத்திரை விழுந்துவிட்டால் அவனுக்கு மதிப்பு எது? இதற்கு அந்த நண்பனும் விதிவிலக்கில்லை. தேவைப்பட்ட நேரத்தில் அவனை பயன்படுத்தும் ஆசிரியர்கள், படிப்பு விஷயம் என்று வந்துவிட்டால் அவனை அவமானப்படுத்த தவறியதில்லை.

அப்படிபட்ட என் நண்பனிடம் சிக்கி விழித்த ஒரு ஆசிரியரைப் பற்றியது இது.

அன்றும் எப்போதும்போல வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் அசுவாரசியமாகப் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்க, என் நண்பன் வழக்கம் போல ஏதோ சேட்டையில் ஈடுபட்டிருந்தான். அவனது செயலால் ஈர்க்கப்பட நாங்கள், கவனம் கலைந்து அவனை ரசிக்க தொடங்கினோம். ஒரு நேரத்தில் சலசலப்பும், சிரிப்பு சத்தமும் எங்களையும் மீறி அதிகமாக வெளிப்பட்டுவிட்டது. இதை கவனித்த ஆசிரியர், என் நண்பனை எழுப்பி என்னவென்று விசாரித்தார்.

“என்ன சார்? அங்க தனியா பாடம் நடத்துறீங்களா?”, என்றார் ஆசிரியார்.

“இல்ல சார். நீங்கதான் பாடம் நடத்துறீங்க. நாங்க கேட்டுக்கிட்டிருக்கோம்!!” என்றான் நண்பன்.

அவ்வளவுதான் ஆசிரியர் கடுப்பாகிவிட்டார். வகுப்பின் வாசலைக் காட்டி, “I say you get out..!!” என்று கத்தி விட்டார்.

எங்களுக்கோ திக்கென்றது. எங்கே அவனோடு சேர்ந்து சிரித்த எங்களையும் வெளியே அனுப்பிவிடுவாரோ என்று பயந்து விட்டோம்.

நண்பன், ”சார்..!!” என்றபடி தயங்கி நின்றான்.

அவர் முறைப்புடன் வாசலைக் கை காட்ட, நண்பன் புத்தகத்துடன் வெளியே சென்றுவிட்டான்.

ஆசிரியர் மீண்டும் பாடத்தை நடத்த தொடங்கினார்.

சிறிது நேரத்தில், எங்கள் வகுப்பறையிலிருந்து மூன்றாவது வகுப்பில் சிறிது சலசலப்பு கேட்டது. அப்போதுதான் ஆசிரியருக்கும், எங்களுக்கும் நினைவு வந்தது. அது பள்ளி முதல்வர் வரும் நேரம். ஆசிரியர் கொஞ்சம் பதட்டமானார். அந்த பள்ளியில் பல ஆசிரியர்கள் மாணவர்களை பாரபட்சத்துடன் நடத்தினாலும், பள்ளி முதல்வர் அப்படி இல்லை. மாணவர் ஒருவர் கூட அனாவசியாமாக தண்டிக்கப்படக்கூடாது என்று கூறுபவர். அதனால்தான் ஆசிரியர் பதட்டமடைந்தார். பள்ளி முதல்வர் வந்தால் அனாவசியமாக அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமே!!

அதனால் நண்பனை உள்ளே வருமாறு சைகை காட்டினார். அவனுக்கு புரியவில்லை.

“என்ன சார்?” என்று வெளியே நின்றபடியே கேட்டான். ஆசிரியர் இன்னும் பதட்டமாகிவிட்டார். முதல்வர் வந்துவிடுவாரோ என்ற அவசரத்தில் மீண்டும் உள்ளே வருமாறு சைகை காட்டினார். அவன் புரியாமல் விழித்தான். ஆசிரியருக்கோ கோபமும், பதட்டமும் அதிகமாகி விட்டது. வேகமாக வெளியே வந்தார். அவர் அடிக்கத்தான் வருகிராரோ என்று நண்பன் பயந்து விட்டான்.

வேகமாக வெளியே வந்தவர், வகுப்பின் உள்ளே கை காட்டி, “I say you get out..!!” என்று கத்திவிட்டார். உள்ளே எங்களுக்கும் கேட்டுவிட்டது. கேட்ட மாத்திரத்தில் நாங்கள் அனைவரும் குபீர் என சிரித்து விட்டோம். அவர் என்ன சொன்னார் என்று அவருக்கு புரியவில்லை போல. உள்ளே வந்து எங்களை அதட்டிவிட்டு, வெளியே சென்றார். மீண்டும் அதேபோல வகுப்பின் உள்ளே கை காட்டி, “I say you get out..!!” என்றார்.

இப்போதுதான் அவர் தன்னை வகுப்புக்குள்ளே போகச் சொல்கிறார் என்று நண்பனுக்கு புரிந்தது. விட்டால் போதுமென்று அவன் உள்ளே வந்து அமர்ந்துகொண்டான்.
அன்றிலிருந்து அதை நினைத்து நினைத்து நாங்கள் சிரிக்காத நாளில்லை.

இன்றுவரை அந்த ஆசிரியருக்கு தான் தவறாக சொல்லிவிட்டோம் என்று உணர்ந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், நண்பர்கள் நாங்கள் எப்போது ஒன்று கூடினாலும் அவரைப்பற்றி பேசாமல் பிரிவதில்லை.

நன்றாகப் படிக்கிறோம் என்று அடையாளப்படுத்தபட்ட நாங்கள், நகரங்களுக்கு வந்து கம்ப்யூட்டர் தட்டிக்கொண்டிருக்கிறோம். படிக்க லாயக்கில்லை என்று ஒதுக்கப்பட்ட என் நண்பன், இன்று ஆசிரியராகி பல மாணவர்களை படிப்பித்துக்கொண்டிருக்கிறான்.

=======================================

ஆகவே இன்றைய மாணவர்களே!! பள்ளி/கல்லூரி படிப்பும், அதன் மூலம் பெரும் மதிப்பெண்களும் நமக்கு ஒரு அடையாளம் மட்டுமே!!! அதுவே வாழ்க்கை அல்ல. வாழ்க்கை மூலம் நாம் பெறும் அனுபவங்களைக் கொண்டு நம்மை நிரூபிப்பதன் மூலமே நமது தனித்த அடையாளத்தை பெற இயலும். இன்று வாங்கும் மதிப்பெண்களே நமது வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி நாம் சந்திக்கவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கீங்களா?? சந்தோஷம். உங்களுக்கான கதவு டாக்டர், இஞ்சீனியர், வக்கீல் என்று ஒரு சிலதான். அதன் வழியே செல்லுங்கள். வாழ்த்துக்கள்.



குறைந்த மதிப்பெண்கள்தான் வாங்கியிருக்கீங்களா?? ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!! உங்களுக்கு கதவு என்பதே இல்லை. நீங்கள் விரும்பிய பக்கம் செல்லுங்கள். அனுபவங்கள் என்ற செல்வம் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றது. அள்ளி வாருங்கள். அதன் மூலம் உங்கள் விருப்பம் போல ஒரு தொழிலை தொடங்குங்கள். முதலாளி ஆகுங்கள். அதில், நன்றாகப் படித்த உங்கள் நண்பர்களுக்கு வேலை கொடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே..!!! வெற்றி நிச்சயம் உனக்கே..!!!

‘யாவரும் நலம்’

July 28, 2012

என்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி

3 comments:

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும், இன்றைய செய்திகள் பற்றி இணையத்தில் உலவியபோது ‘என்டோசல்பான்’ பற்றிய செய்தி அதிகமாக அடிபட்டது. உச்ச நீதி மன்றம் மத்திய அரசிடம் என்டோசல்பான் பற்றி விளக்கம் கேட்க, அதற்கு மத்திய அரசு கொடுத்த விளக்கம்தான் இன்று ஊடகம், இணையம் என்று அனைத்து இடங்களிலும் பரபரப்பான விவாதப் பொருளாகிவிட்டது.


 அதாவது, சென்ற ஆண்டு மே மாதமே, உச்சநீதி மன்றம் என்டோசல்பான் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்திருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், என்டோசல்பான் தயாரித்த மூன்று நிறுவனங்களின் கையில் உள்ள மூலப்பொருட்களின் அளவு, மற்றும் அவற்றை அகற்றும் வழிமுறைகளைப் பற்றியும் மத்திய அரசை கேட்டிருந்தது.

அதற்கு மத்திய அரசு, “என்டோசல்பானை பயன்படுத்தாமல் அப்படியே அகற்றுவது சுலபம் அல்ல என்றும், மேலும் அரசுக்கு நஷ்டம் வரும் என்றும் அறிக்கை சமர்பித்துள்ளது. அதனால் கேரளா, கர்நாடகா [இந்த இரு மாநிலங்களிலும், அந்தந்த அரசே என்டோசல்பான் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.] நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்களிலும் என்டோசல்பானை பயன்படுத்த அனுமதி கேட்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது”.

மத்திய அரசின் இந்த அறிக்கைதான் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என்டோசல்பான் பற்றி ஏற்கனவே ஓரளவு தெரிந்தாலும், அதனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இணையத்தை மேய்ந்த பொழுது முகநூலில், வேளாண்மை குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.Balachandran Ruthramoorthy அவர்கள் அனைத்து தகவல்களையும் திரட்டி ஒரு பதிவிட்டிருந்தார். அவரின் அனுமதியோடு அந்த கட்டுரையை உங்களுக்காக இங்கே கொடுத்திருக்கிறேன். 

இனி கட்டுரையை படியுங்கள்:

******
நன்றி (வேளாண் நண்பர்கள்)
******
1950களில் கண்டுபிடிக்கப்பட்ட என்டோசல்பான் எனப்படுகின்ற இப்பூச்சிக் கொல்லி மருந்து, உலகெங்கும் தொட பயன்படுத்தப்பட்டு வந்ததன் விளைவாக பல்வேறு நாடுகள் இதனால் பாதிப்பைச் சந்தித்தன. பல்வேறு நாடுகளில் என்டோசல்பான் தெளிக்கப்பட்ட நீரைப் பருகிய கால்நடைகளும், மீன்களும் இறந்து போயின. இதனைத் தொடர்ந்து பயன்படுத்திய உழவர்கள் மடிந்தனர் அல்லது நோய்வாய்ப்பட்டனர். 2002ஆம் ஆண்டு இம்மருந்து நீரில் நச்சுத்தன்மையை பாய்ச்சுவதாகக் கூறி வடஅமெரிக்க மீன் மற்றும் வனத்துறையினர் இம் மருந்தைத் தடை செய்ய பரிந்துரைத்தனர். இவ்வாண்டு வரை ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட நாடுகள் என்டோசல்பான் மருந்துகளை தடை செய்துள்ளன.

1995ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தியது. இதன் விளைவாக மே 2001இல் ஸ்டாக்ஹோம்மில் முடிவு எட்டப்பட்டு மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. 2009ஆம் ஆண்டு இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்க்கவும் அவ்வமைப்பு ஒப்புக் கொண்டது.

இப்பட்டியலில் என்டோசல்பானை சேர்த்தால், உலகளவில் அப்பொருளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதனால் இதனை உற்பத்தி செய்யும் தனியார் பெருநிறுவனங்கள் நட்டமடையும். உலகளவில் அதிகமாக பயன்படுத்தும் நாடாக விளங்கும் இந்திய அரசு, உலகமயப் பெருமுதலாளிகளுக்கு ஏற்படும் இந்த நட்டத்தை தடுக்கவே, இம் மருந்தை தடை செய்ய விரும்பவில்லை. ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் இம்மருந்தை இணைக்கவும் இந்தியா எதிர்க்கிறது.

என்டோசல்பான் மருந்திற்கு பதிலாக, மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத மற்றொரு பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தீர்வல்ல. மனித இனத்திற்கு கேடு விளைவிக்காத செயற்கையான வேதிப்பொருட்கள் என ஒன்றும் இருக்க முடியாது. என்டோசல்பான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் மட்டுமின்றி, உழவர்களின் உயிரைப் பறிக்கும் அனைத்து விதமான பூச்சிக் கொல்லிகளையும் நாம் முற்றிலும் புறக்கணித்தே ஆக வேண்டும்.


1990களில் இருந்தே இதன் பாதிப்புகள் பெரிய அளவில் வெளிப்பட்டு வந்த நிலையில், கேரள அரசும் இந்திய அரசும் இணைந்து இதுவரை 11 குழுக்கள் அமைத்து இது குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றன. ஆனால் நிரந்தரத் தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை.

வெறும் பூச்சிக் கொல்லி மருந்து என அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த என்டோசல்பான், பூச்சிக் கொல்லி மருந்து மட்டுமல்ல மனித உயிர்களைக் காவு வாங்கும் உயிர்க்கொல்லியாகவும் அது செயல்பட்டு வந்ததை பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வந்தன.


முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி கருவில் இருந்த குழந்தைகளையும் பாதிப்படையச் செய்த இந்த பூச்சிக் கொல்லி மருந்து ஆண்டுக்கு 3 முறை என 1978லிருந்து 2001ஆம் ஆண்டு வரை கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள முந்திரிப் பயிர்களில் தெளிக்கப்பட்டு வந்ததாகக் கேரள அரசு இது குறித்து ஆராய்ந்து அளித்த தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் இம் மருந்தை இந்திய அளவில் தடை செய்ய ஒருநாள் அடையாள உண்ணாநிலை மேற்கொண்டார். ஆனால், இந்திய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடை செய்ய விரும்பவில்லை என அறிவித்தது.

என்டோசல்பானில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு, 2001ஆம் ஆண்டு திருமதி. லீலா குமாரி என்பவர் கேரளாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில், என்டோசல்பான் தெளிப்பதற்கு இடைக்காலத் தடை ஆணையைப் பெற்றார். எனினும், பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனங்களின் தலையீட்டால் இந்தத் தடை தகர்க்கப்பட்டது. பின்னர், 2003இல் கேரள உயர்நீதி மன்றம் என்டோசல்பான் மருந்தைத் தெளிக்க தடை விதித்த மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தி மீண்டும் தடைஉத்தரவு பிறப்பித்தது. தொழில் வழி சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் அளித்த அறிக்கையை முன்னிட்டு கேரள அரசு அம் மருந்தை நிரந்தரமாகத் தடை செய்தது.


ஜூன் 9-2011 இல் வெளியான செய்தி இது

எண்டோசல்பான் - உயிரை உறிஞ்சும் பூச்சிக்கொல்லி ( Human killer Pesticide Endosulfan )


கேரளாவின் என்மகஜே பஞ்சாயத்தில் உள்ள படர் கிராமத்தில் வசிப்பவர், நாராயண பட். அவரது தந்தை புற்றுநோயினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். தாய் சிறுநீரகப் புற்றுநோயால் இறந்தார். 35 வயதான அவரது தங்கையும், 22 வயதான மருமகனும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இன்னொரு மருமகன் விஷ்ணுவுக்கு வலிப்பு நோயின் பாதிப்போடு மனநிலை பாதிப்பும் இருந்தது. விஷ்ணுவின் இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்த போது அவரது இரத்தத்தில், 108.0 பி.பி.எம். (Parts-Per-Million) அளவிற்கு என்டோசல்பான் (Endosulfan) என்கிற பூச்சிக் கொல்லி(?) மருந்து இருந்ததைப் பரிசோதனையில் கண்டறிந்தனர்.

2002 இல் ஆறு வயதான சிறுவன் பாலகிருஷ்ணன் மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் இறந்து போக, அவனைக் காப்பாற்றுவதற்கு வசதி, வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் விதியென அவனை அழுகையுடன் வழியனுப்புகின்றனர், அவனது ஏழைப் பெற்றோர்.

நாராயண பட், பாலகிருஷ்ணன் குடும்பத்தைப் போல இவர்களது இருப்பிடத்தைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மனிதர்களுக்கு மட்டுமின்றி, அப்பகுதி மக்களால் வளர்க்கப்பட்டு வந்த கால்நடைகளுக்கும் உடற்கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டன. நரம்பு மண்டல பாதிப்புகளுடனும், மனநிலை பாதிப்புகளுடனும், உடல் ஊனமுற்ற நிலையிலும் குழந்தைகள் பிறந்தன. வயதானவர்களுக்கு தோல்நோய், புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளும் உண்டாகின. இந்த அசாதாரண உடற்கோளாறுகளின் மூல காரணத்தைக் கண்டறிய யாரும் அவ்வளவு சிரமப்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி முழுவதிலும் கேரள அரசின் முந்திரித் தோப்பில் தெளிக்கப்பட்டு வந்த என்டோசல்பான் என்கிற பூச்சிக் கொல்லி மருந்தின் பாதிப்பே இது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஏறத்தாழ 1978லிருந்து கால் நூற்றாண்டாக அந்தப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள முந்திரித் தோப்புகளில் தெளிக்கப்பட்டு வந்த இப்பூச்சிக் கொல்லி மருந்தால் தான் அப்பகுதி முழுவதிலும் வாழும் மக்கள் பல்வேறு உடற்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

அம்மருந்து கேரளாவில் மட்டுமின்றி, கர்நாடகத்திலும் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தியா முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களில் இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் காங்கிரஸ் அரசு என்டோசல்பான் மருந்தைத் தடை செய்ய மறுத்து வரும் நிலையில், இந்திய அரசின் அம்முடிவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. உலகளவில் என்டோசல்பானை அதிகளவில் பயன்படுத்தும் முதன்மை நாடு இந்தியாவே என்பதும் கவனிக்கத்தக்கது.

உணவை உற்பத்தி செய்து உலகின் பசியாற்றும் உழவுத் தொழில் இன்றைக்கு உலகமயப் பொருளியல் வளர வளர நலிந்து போயுள்ளதை நாம் அறிவோம். ஆயினும், உணவு உற்பத்தியை தேவை அடிப்படையில் செய்யாமல், இலாபத்தின் அடிப்படையில் செய்திட பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்டவற்றை 'விஞ்ஞான வளர்ச்சி' என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் உழவர்களிடையே வலிந்துத் திணித்தது முதலாளியம்.

இரசாயன வேளாண்மை உழவர்களுக்கு இலாபம் தரவில்லை. மாறாகஅவர்களைக் கடனாளி ஆக்கியது. ஆனால் பூச்சிக் கொல்லி நிறுவனங்கள் இலாபத்தில் கொழுத்தன.

பருவநிலை மாறுதலால் புதிய புதிய நோய்கள் உருவாகி பயிர்களை அழிப்பது ஒருபுறம் இருந்தாலும், இரசாயனப் பொருட்களாலும் மருந்துகளாலும், பயிர்களை குறைந்த காலத்தில் வேக வேகமாக வளர்த்திட புதிது புதிதான வேதி மருந்துகளும், புகுத்தப்பட்டன. புதிய புதிய பூச்சிகளும், நோய்களும் பயிர்களைத் தாக்கின. பின், புதிதாக வளர்ந்த பூச்சிகளைக் கொல்வதற்கென பூச்சிக் கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டு, உழவர்களை அம்மருந்துகளின் மேல் மோகம் கொள்ள வைத்தன, மருந்து நிறுவனங்கள்.

உழவுத் தொழிலில் மட்டும் 2001ஆம் ஆண்டு உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு 5.05 பில்லியன் பவுண்டுகள் (5005 கோடி பவுண்டு) என சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency - EPA) அமைப்பு கணக்கிட்டது. சற்றொப்ப 31.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் அவ்வாண்டு பயன்பாட்டில் இருந்ததையும் அது அறிவித்தது. இவை அனைத்தும் நம் பூமிப்பந்தின் மீது நடத்திய இரசாயனத் தாக்குதலால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணும்போது அதிர்ச்சியே மேலிடுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், அவை எதை அழிக்க பயன்படுத்தப்படுகின்றனவோ அதைத் தவிர 98 விழுக்காட்டுப் பொருட்கள் மீதே பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


  
இனி நான்:

பூச்சிக்கொல்லி என்ற பெயரில் நம் கையில் விஷத்தை கொடுத்து நம்மையே திங்க சொல்கிறார்களே!! இது சரிதானா நண்பர்களே!!?? யோசியுங்கள். நமது அடுத்த தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் முடிவை எடுக்கும் முக்கியமான ஒரு காலக் கட்டத்தில் இருக்கிறோம். இப்போது நாம் எடுக்கும் முடிவுதான் நமது அடுத்த சந்ததியினர் எப்படிபட்ட வாழ்க்கையை வாழப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும். என்டோசல்பான் என்றில்லை. பூச்சிக்கொல்லி என்ற பெயரில் எந்த விஷத்தையும், நம் மண்ணில் நாம் விதைக்கக் கூடாது. ஆகவே நண்பர்களே!! இந்தக் கட்டுரையை பத்தோடு பதினொன்று என்று விட்டுவிடாமல், முடிந்த வரையில் அனைவரையும் சென்று அடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். இனி விடியும் உலகம் ஆரோக்கியமாக விடியட்டும்.

 சிறிய பின்வீச்சு:

சில மாதங்களுக்கு முன், வயலில் அப்பாவோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருடன் நடந்த உரையாடல் இது:

"அப்பா! நம்ம வயல்லயும் செடிங்களுக்கு என்டோசல்பான் தெளிக்கிறீங்களா?" என்று கேட்டேன்.

"அதெல்லாம் கிடையாது. ஆரம்பத்துல கொஞ்ச நாள் வாங்கினேன். ஆனால் இப்போ எல்லாம் அதை வாங்குறது கிடையாது." என்று அப்பா கூறினார்.

மனதில் ஒரு இனம் புரியாத நிம்மதி வந்தது. ஆனாலும் அந்த நிம்மதியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம் பசுமைப் புரட்சியின் நீட்சியாக, இன்றும் செயற்கை உரங்களைக் கொண்ட விவசாயத்தை விடாமல் அப்பா தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

செயற்கை உரங்களின் பாதிப்புகளையும், இயற்கை விவசாயத்தின் அருமையும், அதன் பலன்களைப் பற்றியும் அப்பாவிடம் எடுத்துக் கூறி அவர் மனதை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறேன்.

வியசாயக் குடும்பத்தில் இருந்து வந்த நண்பர்களே!! நமக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுவோம். ஆரோக்கியமான வழி காண்போம்.!!!

‘யாவரும் நலம்'

July 10, 2012

நான் ஈ

4 comments:


தமிழ் சினிமாவில் விலங்குகள் நடிப்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. விட்டலாச்சாரியார் காலம் தொட்டு, இப்படி விலங்குகளை நடிக்க வைப்பது வழக்கமான ஒன்றுதான். அதை ராம.நாராயணன் இன்னும் பரவலாக விரிவுபடுத்தினார். அவர் படங்களில்தான் ஆடு, மாடு, குரங்கு, பாம்பு என்று ஒரு விலங்குப் படையே நடித்திருக்கும். “பொண்ணு டைப் அடிக்கிற மாதிரி படம் எடுத்தேன். யாரும் கண்டுக்கல. பாம்பு டைப் அடிக்கிற மாதிரி படம் எடுத்தேன். மக்கள் அமோக ஆதரவு கொடுத்தார்கள்.” என்று அவர் தன்னிலை விளக்கம் வேறு கொடுத்தார். அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக விலங்குகளின் வரிசையில்,ஒரு ஈ நடித்திருக்கும் படம்தான் ‘நான் ஈ’.


 கதை என்னவோ எப்பவுமே நாம் பார்த்தும் கேட்டுக் கொண்டிருக்கும் அதே பழி வாங்கும் கதைதான். ஒரு ஊர்ல ஒரு காதலன், காதலி. ஆனால் அந்த காதலியின் மேல் வில்லனுக்கும் ஒரு கண். அவளை அடைய தடையாக இருக்கும் காதலனை, வில்லன் கொன்று விடுகின்றான். இறந்து விட்ட காதலன், ஒரு ஈயாக மறு ஜென்மம் எடுத்து, வில்லனை அழித்து, தனது காதலியை காப்பதே இந்த படத்தின் கதை. பொதுவாக சினிமா விமர்சனம் எழுதும்போது நான் அந்த படத்தின் கதையை கூறுவதில்லை. படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடக் கூடாதே என்பதுதான் காரணம். ஆனால் இந்த படத்திற்கு கதையை கூறுவதனால் யாதொரு பாதகமும் இல்லை. காரணம், இந்த படத்தை காட்சிகளால் கொண்டு சென்ற விதம். சுமார் இரண்டேகால் மணி நேரம், கவனத்தை சிதற விடாமல் படம் மட்டுமே பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?

ஒரு ஈயை வைத்து எப்படி கதை சொல்லியிருப்பார்கள் என்ற சிறு ஆர்வத்திலேயே படம் பார்க்க சென்றிருந்தேன். தெலுங்கு ‘ஈகா’ இங்கு மொழி மாற்றி தமிழில் வெளியிட்டிருப்பார்களோ என்ற ஐயமும் கூடவே இருந்தது. காரணம், உதட்டசைவு ஒன்றாக இருக்க, வார்த்தைகள் வேறாக வந்து விழுவது படத்தின் மீதான ஈர்ப்பையே குறைத்து விடும். அப்படியும் சமீபத்தில் என்னை ஈர்த்த மொழி மாற்று திரைப்படம் ‘உருமி’. நிற்க. இப்படி தெலுங்கு தேசத்தில் இருந்து வந்த படம் என்ற காரணம் என்னை தடுத்தாலும், ‘ஈ’யை மையமாகக் கொண்ட படம் என்ற ஒரே காரணத்துக்காக படம் பார்க்க சென்றேன். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி எனது நம்பிக்கையை மோசம் செய்யவில்லை. மாறாக அவரது மற்ற 8 படங்களையும் தேடி பார்க்கும் அளவுக்கு எனது ஆர்வத்தை தூண்டி விட்டார். ஆமாம். இது அவரது ஒன்பதாவது வெற்றிப் படம்.


முதல் பாதியில் ஒரு முக்கால் மணி நேரம் வெறும் காதல் படமாக செல்ல, நாயகன் நானி இறந்து ஈயாக பிறப்பெடுத்த பின்தான் படம் அசுர வேகத்தில் செல்கிறது. படத்தின் முக்கால்வாசி பணம் வரைகலைப் பணிகளுக்காகவே செலவிடப்பட்டிருக்கிறது. மற்ற விலங்குகள் என்றால் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஈயை எப்படி நடிக்க வைப்பது? அதற்குத்தான் இவ்வளவு செலவும். படத்தின் மொத்த செலவு 30 கோடியாம். அவர்கள் செலவு செய்ததும், பட்ட கஷ்டமும் வீண் போகவில்லை. மொத்த படக்குழுவினருக்கும் ஒரு பெரிய பூங்கொத்து. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
இயக்குனருக்கு அடுத்து, தனித்த பாராட்டை அள்ளிக்கொள்பவர் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இல்லாத ஒரு ஈ. ஆனால் அது பயணிக்கும் பாதை, வேகம், ஒரு ஈயை காட்டும்போது அதை சுற்றியுள்ள பொருட்கள் தெரியும் விதம் என்று ஒவ்வொன்றையும் கவனத்தில் கொண்டு மிக அற்புதமாக படம் பிடித்துள்ளார். அதுவும் மாந்திரீக பூஜை [தெலுங்கு சினிமாவையும் மாந்திரீகத்தையும் பிரிக்க முடியாது போல..!!] செய்யும் அந்த ஒரு அறைக்குள்ளேயே ஈக்கும், குருவிகளுக்கும் நடக்கும் துரத்தல்கள் மிக அபாரம். அதே போலதான் அந்த விபத்துக் காட்சியும். ஒளிப்பதிவாளருடன் கூடவே அதே அளவு பாராட்டுக்களை பெற்றுக் கொள்பவர் வில்லனாக வரும் சுதீப். இல்லாத ஒரு ஈயை, இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல நடிப்பை வெளிப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு நடிகன், சரியான ஒரு இயக்குனரிடம் மாட்டினால் எந்த விதத்திலும் வெளிப்படலாம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.


படத்திற்கு பெரும் பலமாக இருப்பது மரகதமணியின் இசை. ஈ என்று சாதாரணமாக ஒதுக்கி விடாமல், அது செய்யும் சேட்டைகளை நம்மை ரசிக்க வைக்க இசை பெரும் பங்கு வகிக்கின்றது. அதுவும் ‘ஈடா..!! ஈடா..!!’ பாடலில் அதன் இசையும், பாடலுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்திய விதமும் தொடர்ந்து கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டது. ஈ சம்பத்தப்பட்ட காட்சிகளில் இசையமைப்பாளர் தனிக் கவனம் செலுத்தியிருப்பது நன்று தெரிகின்றது.

நாயகி சமந்தா. கதையின் தேவைக்கேற்ப அழகாக வந்து போகிறார். நானி செய்யும் காதல் குறும்புகளால் ஈர்க்கப்படும்போதும், அதை வெளிக்காட்டாமல் அவரை அலைய விடும்போதும், ஈதான் நானி என்று அறியும் வேளையிலும், சுதீப்பை எதிர்பாராத வேளைகளில் சந்திக்கும்போது காட்டும் அதிர்ச்சியில் எனக்கும் நடிக்கத் தெரியும் என்று சொல்லாமல் சொல்லிவிடுகின்றார்.


படத்தின் இன்னொரு இனிய அதிர்ச்சி சந்தானம். மொக்கையாக எடுக்கப்படும் படங்களிலேயே சந்தானம் காட்சிகளை இணைத்து விளம்பரப்படுத்தும் இன்றைய சூழலில், சந்தானம் இருந்தும் அவரை முன்னிலைப் படுத்தாமல் ஈயை மட்டுமே நம்பி விளம்பரப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நடுவில் திடீரென சந்தானம் வந்து, வந்த வேகத்தில் காணாமல் போய் விடுகின்றார். சரி!! மற்ற படங்கள் போல சந்தானத்தை வைத்து படத்தை வியாபாரம் செய்யும் உத்தி என்று நினைத்தால், படத்தின் முடிவில் அதற்கும் ஒரு விடை வைத்திருக்கிறார் இயக்குனர். படம் முடிந்துவிட்டது என்று அவசர அவசரமாக அரங்கை விட்டு வெளியே ஓடியவர்கள், மீண்டும் திரும்பி வந்தார்கள். அவசரக்குடுக்கைகள்.

அப்புறம் இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லியே ஆகணும். இதுவரை அக்கட தேசத்திலிருந்து சொல்லியோ, சொல்லாமலோ அவர்கள் படங்களையும், நடனங்கள், காட்சிகள் என்று உருவி தமது படங்களில் வைத்துவிடுவார்கள் நமது தளபதிகளும், அடுத்த முதல்வர்களும். ‘சொந்தமா யோசிச்சு செய்ங்கடா’ என்று பலரும் திட்டியிருப்பார்கள். நானும் திட்டினேன். ஆனால் அப்படி திட்டியதற்கு இப்போது வருத்தப்படுகின்றேன். ஏனென்றால் படத்தில் ஈ செய்யும் பல சாகசக் காட்சிகள் நமது நாயகர்களை கிண்டல் செய்யும் விதமாகவே இருக்கிறது. அதுவும் படம் முடிந்தவுடன் வரும் அந்த இறுதி நடனக் காட்சி [ஐயையோ!! சொல்லிட்டேனே!!] மிக அற்புதம். அப்படி நம்ம நாயகர்கள் உருவி நடிக்கவில்லை என்றால் அந்த இறுதிக் காட்சியை ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!!

பலருக்கும் இது குழந்தைகளுக்கான படம் என்று படத்தை பார்த்த மாத்திரத்திலேயே தோன்றக் கூடும். ஈ செய்யும் சேட்டைகள் கண்டிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கொலை, காமம், வன்மம் என்று கலந்து கட்டிய இந்த படம் குழந்தைகளுக்கான படம்தானா? யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 
எப்படியோ!! 'யாவரும் நலம்' என்றிருந்தால் மகிழ்ச்சிதானே!!

June 03, 2012

உருமி – பதினைந்தாம் நூற்றாண்டின் உறைவாள்

3 comments:
 
 
 
“வாஸ்கோ டா காமா 15ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்தார்.” இதுதான் வரலாற்றில் நான் வாஸ்கோ டா காமா பற்றி அறிந்திருப்பது. அதுவும் பள்ளியில் படிக்கும்போது இவரின் வருகைப் பற்றி உலக வரைபடங்கள் வரையும்போது பிரான்சில் தொடங்கி ஆப்ரிக்காவின் அடியில் திரும்பி இந்தியாவை வந்தடைவதாக ஒரு கோடு வரைவோம். அதிலும் பலரும் பலவிதமாக வரைந்து ஒரு வரலாற்றுக்கு பல கதைகள் சொன்ன கொடுமையும் நடந்தது. நாங்களும் அந்த கோட்டோடு வரலாற்றை மறந்து போனோம். ஆனால் வாஸ்கோ டா காமா இந்தியாவிற்கு எதற்காக வந்தார்? வந்த பின்னர் என்ன நடந்தது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? ‘உருமி’ திரைப்படத்தை பாருங்கள்.

உலகில் பல நாடுகளுக்கு வியாபாரம் பொருட்டு பயணிக்கும் வாஸ்கோ டா காமா ஒரு சுபயோக சுபதினத்தில் சில துணையாகக் கொண்டு இந்தியாவிற்கு வருகிறார். வந்த இடத்தில் நமது நாட்டில் விளையும் மிளகின் அருமையை தெரிந்து கொண்டு அதை வாங்கிச் செல்கிறான். நமது சமையலுக்கு பயன்படும் மிளகை அவர்கள் துப்பாக்கி குண்டாக பயன்படுத்த முடியும் என்று அறிகிறார்கள். அதனால் மீண்டும் ஒரு பெரும்படையுடன் இந்தியாவிற்கு வருகிறான் வாஸ்கோ. அப்போது கேரள சமஸ்தானத்தை சேர்ந்த ‘சிரக்கல் கொத்துவாள்’ தனது படையுடன் சென்று மோதி உயிர் விடுகிறான். அதை கண்டு அவன் மகன் எப்படி வாஸ்கோவை பழி வாங்குகிறான், தனது சொந்த உணர்வுக்காக பழி வாங்குவது என்றில்லாமல், அது எப்படி அந்நிய ஆதிக்கத்தின் முதல் போராட்டமாக அமைந்தது என்று காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன்.

படம் மொத்தமும் வாஸ்கோவின் வருகையும் அதன் பின்னர் அவன் மரணம் வரை நிகழும் நம் மக்களின் போராட்டம்தான் என்றாலும் அது இந்த தலைமுறைக்குப் புரிய வேண்டுமே!! உருமியின் கதை நிகழ்காலத்தில் தொடங்குகிறது. பிரித்விராஜ், பிரபுதேவா இருவரும் நண்பர்கள். இன்றைய தலைமுறையின் அடையாளமாக குடியும், கூத்துமாக வெட்டியாகப் பொழுதை கழிக்கிறார்கள். அப்போது ஒரு பன்னாட்டு நிறுவனம் பிரித்வியின் பூர்வீக நிலத்தை, அங்கு கிடைக்கும் கனிம வளங்களுக்காக விலை பேச வருகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் ஒரு பள்ளி இருப்பதால் அந்த இடத்தை விற்பதில் சிக்கல். அந்த சிக்கலை தீர்த்து, நிலத்தை விற்று பணத்தைப் பெற்றுக்கொள்ள தன் ஊருக்கு வருகிறார் பிரித்வி. அந்த நிலத்தை ஒட்டி வாழும் பழங்குடியினர் அவர்களைக் கடத்தி செல்கிறார்கள்.
 
 
பழங்குடியினர் தலைவனான ஆர்யா, பிரித்வியை தனியே அழைத்து அவரது தலைமுறைப் பற்றியும், அதன் வரலாற்றையும் சொல்கிறார். தமது முன்னோர்கள் தங்களது நிலத்தை அன்னியரிடமிருந்து காக்க அவர்களது போராட்டங்கள், செய்த தியாகங்கள் என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார். சமூகம் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் விட்டேத்தியாக சுற்றிக் கொண்டிருந்த பிரித்வி, தற்போது தனது நிலை உணர்ந்து எடுக்கும் முடிவுடன் படம் இனிதே நிறைவுறுகிறது.

படத்தில் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் திரைக்கதையும், அதற்கான நடிகர்கள் தேர்வும். சரித்திரக் காலத்தில் நிகழும் சம்பவங்கள் அதே உணர்வுகளுடன் அதே கதாபாத்திரங்களால் நிகழ் காலத்திலும் நடப்பதாக அமைத்திருப்பது மிக நன்று. யார், யாரென்று அவர்தான் இவர் என்று திரை அரங்கில் ஆங்காங்கே விவாதமே நடைபெற்றது. அடுத்து பாராட்டப்பட வேண்டியவர் தமிழில் வசனம் எழுதிய சசிகுமரன். இந்த படத்தை வசனத்துக்காகவே மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். தமிழில் அவ்வளவு அடர்த்தி. அதுவும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான வசனங்களில் காரம் இன்னும் அதிகம்.

வரலாற்றுப் படங்களுக்கு மிகவும் நம்பகத் தன்மை ஏற்படுத்துவது கதை நிகழும் இடம், கதை மாந்தர்களின் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள்தான். இவை அனைத்தும் இந்த படத்தில் சரியாகவே அமைந்திருக்கிறது. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா? ரொம்ப சுலபம். வரலாற்றுப் படங்கள் பார்க்கும்பொழுது எந்த ஒரு விஷயமும் இடறாமல் கதை ஓட்டத்தில் நம்மை அழைத்து சென்றால் அது சரியான படமே!! இந்த படத்தில் எனக்கு எந்த ஒரு இடறலும் ஏற்படவில்லை.
 
 
 ஒளிப்பதிவாளர்களுக்கான உயரிய அமைப்பான American Society of Cinematographers (ASC)யில் சமீபத்தில் கௌரவிக்கப்பட்டவர். இந்தப் படம் அதற்கு சான்று. அதிரும் உருமி, யானையின் கால்கள், குதிரை குளம்புகளில் பட்டு தெறிக்கும் சேறு என ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் வாள் வீச்சு, வேல் கம்பு, தெறிக்கும் ரத்தம், என களத்தின் உள்ளேயே நாம் இருப்பதை போன்ற உணர்வைத் தருகிறது. மொத்தத்தில் ஒளிப்பதிவின் தரம் இந்த படத்தில் மிக அற்புதம்.

நடிகர்கள் என்று பார்க்கப் போனால், பிரித்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன், என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். வரலாற்றின் கதாபாத்திரமாக ஒவ்வொருவரும் வருவதால் அவரவர்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக அளித்திருக்கிறார்கள். ஆனால் நான்கு காட்சிகளில் வந்து ஆடுவதற்கு தபு எதற்கு? அதிலும் close-up காட்சிகளில் ரொம்ப பயமுறுத்துகிறார். ஒருவேளை மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறாரோ?

இசையைப் பொறுத்தவரை பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், இந்த வரலாற்றுப் படத்தில் பாடல்கள் எதற்கு? அனைவருக்கும் தெரிந்த வரலாற்றுப் படம் என்றால் ‘காந்தி’ திரைப்படத்தை சொல்லலாம். பாடலே இல்லாமல் வந்த அருமையான வரலாற்றுப் பதிவு. அதேபோலத்தான் உருமியும். வாஸ்கோ டா காமா ஒரு வரலாற்று நாயகன் அல்ல. நமது வரலாற்றில் நமது மண்ணை காக்கப் போராடியவர்கள்தான் உண்மையான நாயகர்கள் என்பதை கூற வந்த திரைப்படம். நேர்த்தியாக சொல்லியிருக்கும் இந்த படத்தில் பாடல்கள் மிகப் பெரிய தடை.

கண்ட மசாலா குப்பைகள் சினிமா என்று வந்து கழுத்தருக்கும் இந்த காலக் கட்டத்தில் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியப் பகுதியை மிகவும் அழகாகவும், செய்நேர்த்தியுடனும் படைத்து, சினிமா என்ற ஊடகத்தை மிகச் சரியாக பயன்படுத்தி இந்த படத்தை நமக்கு அளித்த இயக்குனர் சந்தோஷ் சிவன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
 
நாம் நமது சுயத்தை உணராமல் என்று அன்னியரின் திறமையை பார்த்து மயங்குகிறோமோ அப்போதெல்லாம் அவன் நம்மை அடிமைப் படுத்த தயங்க மாட்டான். அன்று, நம் மக்கள் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள். அதனால் இன்னும் வலிமையான ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடிமைப் படுத்தினான். இன்று நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் என்ற பெயரில் நமது அறிவைக் கொண்டே நம்மை அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறான்.

என்று நமது சுயத்தை நாம் உணர்கிறோமோ, அடிமை எண்ணத்தை கலைந்துவிட்டு என்று சுயமாக வாழ்கிறோமோ அன்றுதான் நமது வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும். ‘உருமி’ சொல்வதும் அதுதான்.

யாவரும் நலம்.


May 23, 2012

ஆட்டுக்கல் [23/05/2012]

2 comments:

இந்த வார ஆட்டுக்கல்லில் முக்கியமாக இரண்டு விஷயங்கள் பற்றி கூற இருக்கிறேன். இன்று அரைக்கப்படும் மசாலா கார மிளகாய் சேர்க்கப்பட்டு இருக்கும் அதிக கார சாரமாகவே!!

கல்வி வியாபாரம்:

yaavarumnalam


நேற்றுதான் +2 தேர்வு முடிவுகள் வெளியானது. இன்னும் இரண்டு வாரங்களில் பத்தாவது தேர்வு முடிவுகளும் வந்துவிடும். +2 தேர்வு முடிவு வந்தவுடன் பிள்ளைகளும், பெற்றோரும் மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லூரியாக ஏறி இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். பல இடங்களில் கல்லூரியில் முன்கட்டணம் செலுத்தி பாடப்பிரிவை உறுதி செய்து கொண்டார்கள். அதுவும் எப்படி? நல்ல மதிப்பெண் எடுத்து counseling மூலம் அந்த கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் கட்டிய பணம் free seat-க்கான கட்டணமாகக் கொள்ளப்படும். இல்லையென்றால் management quota-க்கான முன்பணமாக எடுத்துக்கொள்ளப்படும். கல்வி வியாபாரம் என்ற முள்மரத்தில் ஒரு கிளை இது.

கல்லூரிகளில் நடக்கும் வியாபாரம் முள் மரம் என்றால், அப்போ பள்ளிக்கூடங்களில் நடக்கும் வியாபாரம்? நிச்சயமாக அவற்றை முள்மரத்தின் விதைகள் என்று கூறலாம்.

நான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எனது பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். மனப்பாடம் செய்யும் எந்திரமாக நாங்கள் எங்களையே உருமாற்றிக் கொண்டிருந்த காலம் அது. (ஒரு சிலர் கணக்கு பாடத்தையே மனப்பாடம் செய்யும் அளவிற்கு நிலை முற்றிப் போயிருந்தது.)

நான் படித்த அந்த பள்ளி, இன்று அருகாமை இடங்களிலேயே தனது கிளைகளை பரப்பி கல்வி வியாபாரத்தில் நன்றாக வேரூன்றிவிட்டது. அதுவும் கவர்ச்சிகரமான பெயர்களுடன். இதுபோலதான் நாமக்கல் மாவட்டத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் இன்று மதிப்பெண் தொழிற்சாலைகளாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 10,+2 தேர்வு முடிவுகள் வரும்பொழுது நாமக்கல் மாவட்டம் குறைந்தது தலா இரண்டு இடங்களாவது பெற்றுவிடும்.
கடந்த பத்து வருடங்களில் கல்வி வியாபாரத்தின் தலைநகராக நாமக்கல் மாவட்டம் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை. அதாவது விஷ விதைகளை உருவாக்கத்தில் நாமக்கல் மாவட்டம் தற்போது முன்னிலையில் உள்ளது.

இவையெல்லாம் களைய அரசு ஒன்றே ஒன்று செய்தால் போதும். சமச்சீர் கல்வியை உண்மையிலேயே சமச்சீராக செய்து, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலே இந்த தனியார் கல்வி வியாபாரிகளின் கொட்டம் தானாக கட்டுக்குள் வந்துவிடும்.

பெட்ரோல் வியாபாரம்:



எனக்கு விபரம் தெரிந்து நான் வண்டிக்கு பெட்ரோல் போடும்போது அதன் விலை லிட்டருக்கு 25 ரூபாய். அப்போதெல்லாம் விலையேற்றம் பைசா அளவிலேயே இருக்கும். அதனால் நம் அன்றாட வாழ்க்கையில் பெரிதாக ஏதும் பாதிக்கவில்லை. என்றைக்கு பெட்ரோல் விலையேற்றம் பைசாவிலிருந்து ரூபாய்க்கு தாவியாதோ அன்றிலிருந்தே நமக்கு ஏழரை துவங்கிவிட்டது. இந்த விலை ஏற்றத்திற்கு எண்ணை நிறுவனங்களும், அரசாங்கமும் சொல்லும் காரணம் 'நஷ்டம்'.

அந்த நஷ்டக் கணக்கை நீங்களே பாருங்கள்.



வருமானம் அதிகமானால் அவர்கள் அகராதியில் நஷ்டம் என்று அர்த்தம் போல.

சரி!! இந்த பெட்ரோல் வியாபாரிகளை எத்தனை நாள்தான் திட்டுவது என்று சலித்து சகித்து திரும்பினால், எங்களை திட்டுங்கள் என்று பெட்ரோல் பங்க் முதலாளிகள் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் அப்படி..!!

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 54 பைசா ஏறிவிட்டது.

விலையேற்றம் அறிவிப்பு வந்தவுடன் பெட்ரோல் பங்க் முதலாளிகள் செய்த முதல் காரியம் பங்கை இழுத்து மூடியதுதான். இன்னைக்குதான் அனைத்து வண்டிகளிலும் ஒருசேர பெட்ரோல் காலியானது போல, திறந்திருந்த ஒரு சில பங்குகளில் அவ்வளவு கூட்டம். இரவு 10 மணிக்கு மேலும் பங்க் இருக்கும் இடங்களில் வாகன நெரிசல்.

ஏண்டா!! இப்படி அநியாயம் பண்றீங்க? இப்படி சம்பாதிக்கிற பணம் உங்களுக்கு செரிக்குமாடா? நொன்னைகளா!! நீங்க பண்ணின இந்த வேலைக்கு வாயில நல்லா அசிங்கம் அசிங்கமா வருது. நாகரீகம் கருதி இதோட நிறுத்திக்கிறேன்.

ஏதோ!! இன்னைக்கே குறைஞ்ச காசுல போடுற பெட்ரோல்-ல ஒரு வருஷம் முழுக்க வண்டி ஒட்டுராப்ப்ல அவசரப்பட்டு வாகன நெரிசலை ஏற்படுத்தும் பொது மக்களே!!! நீங்க இப்படி ஒண்ணு சேர்ந்து நிக்க வேண்டிய இடமே வேற..!!!

இப்படியே இருந்தோம்னா நாம உருப்படியா ஒரு ____ம் புடுங்க முடியாது.

எல்லோரும் நல்லா இருங்க..!!!!

யாவரும் நலம்!!

May 10, 2012

இரண்டாவது வெள்ளிக்கிழமை

No comments:
 
 
பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனின் ஒரு விடுமுறையின் முன்னோட்டம் இது. தனியார் பள்ளி விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் அவ்வளவு சுலபமாக வீட்டிற்கு சென்று வர முடியாது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாதம் முழுதும் அடைபட்டிருக்கும் இடத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறதென்றால் அது விடுதலைதானே!!! என்ன? விடுதி மானவர்களுக்கு இரண்டு நாள் மட்டுமே விடுதலை. மீண்டும் தானாகவே வந்து அடைந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை வாழும் மாணவர்களின் விடுமுறை தினத்தை அவர்களோடு சேர்ந்து கொண்டாடலாம் வாருங்கள். 
 
yaavarumnalam.com
 
மூங்கில் குச்சியால், ஜன்னல் கம்பியில் தட்டும் ஒலி மெலிதாக, மிக மெலிதாகக் கேட்டது. எப்போதும் கேட்கும் ஒலித்தான், மற்ற நாளென்றால் தூக்கத்திலேயே ஒருவித வெறுப்பும், சோம்பாலும் வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும். அறைத் தூக்கத்திலேயே எழுந்து, தினக் கடமைகளை அட்டவணைப்படி செய்வது என்று அன்றையப் பொழுது சங்கடத்துடனேயே கழியும். ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கழிப்பது என்பது கட்டாயம் ஆக்கப்படும். ஒவ்வொரு வேலையையும் வேண்டா வெறுப்பாக செய்யத் தோன்றும்.

ஆனால் இன்று அப்படி இல்லை. தூக்கம் கலையும் பொழுதே அந்த நினைப்பு வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும். ஆம். இன்று இரண்டாவது வெள்ளிக்கிழமை. அந்த நினைப்பு வந்த மாத்திரத்திலேயே கண்ணில் ஒட்டியிருக்கும் தூக்கம் போகும் இடம் தெரியாது. இனம் புரியாத உற்சாகம் ஒன்று மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும். கட்டிலில் இருந்து எழும்போதே சுறுசுறுப்பு வந்து தோளில் கை போட்டு அழைத்து செல்லும். இதுவரை சண்டை பிடித்தவனை பார்த்து சிரிக்கத் தோன்றும். எப்போதும் பேஸ்ட் கடன் கேட்டு எரிச்சல்படுத்தும் சரவணனுக்கு இன்று கொடுக்கத் தோன்றும். அனைவரது முகங்களும் ஒன்றுபோல சிரிப்பை பூசிக் கொண்டிருக்கும். வழக்கத்தைவிட இன்றுதான் அனைத்து வேலைகளும் நேரப்படி நடக்கும். அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் பையை தயார் செய்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவோம். இதிலும் ஒரு சிலர் இருப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பே வேண்டியதை தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

காலை உணவின்போது எதிர்ப்படும் அனைவருக்கும் ஒரு புன்னகை வீசப்படும். பதிலுக்கு ஒரு புன்னகை பரிசாக கிடைக்கும். அன்று மட்டும் விடுதி காப்பாளருடன் சினேகமாக பேச சலுகை கிடைக்கும். வகுப்பிற்கு சென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். Day-Scholar என்று அழைக்கப்படும் வீட்டு மாணவர்கள் [நாங்கள் விடுதி மாணவர்கள் என்றால் அவர்களை வீட்டு மாணவர்கள் என்று அழைக்கலாம்தானே!!] எங்கள் சந்தோஷத்தை இன்னும் அதிகப் படுத்துவார்கள். “வீட்டுக்குப் போறேன். அப்பா, அம்மாவை பாக்கப் போறேன்!! என் செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடப் போறேன்” என்று எது சொன்னாலும் ரசிப்பார்கள். நமக்கு அது அளவிட முடியாத சந்தோஷம். அடுத்தவர் சந்தோஷத்தை ரசிப்பதும் அவ்வளவு இன்பமாகத்தானே இருக்கும். என்ன பேசினாலும் கேட்பார்கள். அளவு கடந்த சந்தோஷம் ஒரு சில நேரங்களில் எரிச்சலில் கொண்டு விட்டு விடும். அந்த நேரத்தில் “ஏண்டா இப்படி இம்சை பண்றே!?” என்று அலுத்துக் கொள்வார்கள். மனதில் எதுவுமே ஏறாது. மணி எப்போது நாலு அடிக்கும் என்று காலை முதலே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும்.

ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் ஒவ்வொரு விதமாக சந்தோஷத்தை அதிகப்படுத்துவார்கள். பெரும்பாலும் அன்று வகுப்புகள் நடக்காது. என்ன பாடம் எடுத்தாலும் எங்க மண்டையில ஏறாதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவிற்கு விடுதிக்கு வரும்போது நேராக சாப்பிட செல்லாமல் கால்கள் தன்னிச்சையாக எங்கள் பை இருக்கும் இடத்திற்கு செல்லும். ஏற்கனவே பார்த்து, பார்த்து வேண்டியதை எல்லாம் எடுத்து வைத்திருப்போம். ஆனாலும் மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பிறகே சாப்பிட செல்வோம். அதுவும் அரை சாப்பாடுதான். நினைப்பெல்லாம் வீட்டில் இருக்கும்போது சாப்பாடாவது ஒண்ணாவது.

மீண்டும் வகுப்புக்கு செல்ல வேண்டும். காலையிலேயே ஒன்றும் நடக்கவில்லை. மதியம் மட்டும் பாடம் நடத்தவா போகிறார்கள். அனைத்து வகுப்புகளிலும் அவ்வப்போது கோரசாக குரலெலுப்பி அடிவயிற்றில் மீண்டும் சந்தோஷத்தை அதிகப்படுத்துவார்கள். பாடமே இல்லாமல் நகரும் அந்த வெள்ளிக்கிழமை அவ்வளவு இனிமை. ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் இருப்பார்கள். சரியாக கடைசி வகுப்பிற்கு வந்து கருமமே கண்ணாக பாடம் எடுப்பார்கள். அவ்வளவு கடுப்பாக இருக்கும். ஆனால் விடுவார்களா? அவர்கள் நினைத்தவரையில் பாடம் எடுத்துவிட்டுதான் ஓய்வார்கள். அவ்வளவு நல்லவர்கள்.
 
 
 
அப்போதெல்லாம் அனைவரிடமும் கைக்கடிகாரம் இருக்காது. ஓரிரு மாணவரிடம்தான் இருக்கும். நொடிக்கொரு முறை யாராவது அந்த பையன்களிடம் மணி கேட்டபடியே இருப்பார்கள். மதியம் இரண்டு மணி தாண்டிவிட்டால் மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்கள் ஒவ்வொருத்தராக வர ஆரம்பிப்பார்கள். தொலைதூரம் செல்லும் மாணவர்கள் என்றால் அவர்கள் சீக்கிரமே பெற்றோருடன் ஊருக்கு செல்ல அனுமதிக்கப் படுவார்கள். அந்த நேரத்தில் அந்த பையன் மீது பல பொறாமை கலந்த பார்வைகள் வந்து விழும். அனைத்தையும் ஒரு வெற்றி கலந்த சிரிப்புடன் ஒதுக்கிவிட்டு வேகமாக செல்வான். தப்பு.தப்பு. ஓடுவான். மணி மூன்றை தாண்டும்போது பெற்றோர் ஒவ்வொருத்தராக வகுப்பு ஜன்னலில் வந்து எட்டி பார்த்தபடி இருப்பார்கள். எங்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் சந்தோஷம் அவர்களுக்கு. “டேய்!! உன் அப்பாடா!! உன் அம்மா வந்திருக்காங்கடா!!” என்று சந்தோஷக் கூச்சல் அமைதியாக வரும். தங்கள் அப்பா, அம்மாவின் முகம் தெரியாதா என்ற எதிர்பார்ப்பில் வரும் கூச்சல் அது.  
 
 
மணி நான்கை தொட்டதும்தான் இருக்கும் கச்சேரி. விட்டால் போதுமென்று அனைவரும் வகுப்பை விட்டு விடுதிக்கு ஓடுவோம். அந்த ஓட்டத்தை மட்டும் பந்தயமாக அறிவித்தால் அனைத்து பதக்கங்களும் எங்களுக்குதான். அப்படி ஒரு ஓட்டம் ஓடுவோம். அதேபோன்றதொரு மன ஓட்டத்துடன் எங்களது பெற்றோர்களும் விடுதி வாசலில் வந்து நிற்பார்கள். உடை மாற்றி, பையை எடுத்துக்கொண்டு காப்பாளரிடம் கையெழுத்து போட்டு சொல்லிவிட்டு கிளம்பும்போது ஒரு சந்தோஷ பந்து வயிற்றில் அழுத்தும். பள்ளியின் நுழைவாயிலை கடந்து காலை எடுத்து வெளியே வைக்கும்போது அடிவயிற்றில் இருந்த பந்து மெல்ல உடல் முழுக்க விளையாட.. ஒரு புது உற்சாகம் ஊற்றெடுக்க... இரண்டு நாட்கள் விடுதலை பெற்று இதோ ஊருக்கு போகப் போறேன். மாதத்திற்கு ஒரு முறை இரண்டாவது வெள்ளிக்கிழமை வரத்தான் செய்கிறது. அந்த ஒவ்வொரு தினத்திலும் இந்த கொண்டாட்டங்கள் தொடரத்தான் செய்தன. ஒரே காரணம் வீட்டிற்கு போகும் சந்தோஷம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்களும் ஊருக்கு போங்க. உண்மையான சந்தோஷம் அங்கேதான் இருக்கு.

May 08, 2012

வழக்கும் என் சிந்தனைகளும்

1 comment:
வழக்கு எண் 18/9 திரைப்படத்தை அவ்வளவு சாதாரணமாக மற்றும் ஓர் திரைப்படம் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே திரைப்படத்தில் சமூகத்தின் அவலங்களையும் இவ்வளவு நேர்த்தியாக எந்த சமரசமும் இல்லாமல் சொல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இந்த திரைப்படத்தை பற்றிய எனது பார்வையை தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். நான் இந்த திரைப்படத்தை பற்றி இங்கே மீண்டும் எழுதக் காரணம் இதில் எடுத்தாளப்பட்டுள்ள கதைக்கலன் மற்றும் இதன் கதை மாந்தர்கள். ஆமாம் அனைவரையும் நடிகர்கள் என்பதையும் தாண்டி உண்மை மனிதர்களாக கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்கள்.

முதலில் கதைக்களனைப் பற்றி பார்ப்போம்.

இந்த கதையின் நாயகன் வேலு தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வருவதாகக் கூறுகிறான். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்று சில வருடங்களுக்கு முன்னால் இந்த மாவட்டத்தைப் பற்றிக் கூறுவார்கள். ஆனால் இன்று இந்த மாவட்டம் சவலைப் பிள்ளையாக மாறியது காலத்தின் கோலம். விவசாயத்தையே பெரிதாக நம்பியிருக்கும் மாவட்டம். ஆனால் கால மாற்றத்தில் விவசாயம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒதுக்கப்பட, விவசாயத்தை நம்பி பிழைப்பை நடத்தி வந்தோர் இன்று கட்டாயமாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு தொழிலில் ஈடுபட நிற்பந்திக்கப்பட்டுள்ளனர். அப்படிபட்ட களனில் தொடங்குகிறது இந்தப் படம்.

விவசாயத்தின் வீழ்ச்சியால் துரத்தப்பட்ட வேலு, அன்றாட வாழ்க்கைக்காக வீட்டு வேலைக்கு செல்லும் ஜோதி, கூத்துக்கலை அழிந்துவரும் நிலையில் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் சின்னசாமி, பதின்ம வயதுகளில் பருவ கவர்ச்சியில் வீழ்ந்து வாழ்க்கையை சிதைத்து கொள்ளும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள், வழக்கு விசாரணை நடத்தும் ஆய்வாளர் என்று அனைத்து களன்களுமே நமக்கு புதியவை. இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட ஆனால் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்திருப்பதே இதன் பலம்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியவர்கள் கதையின் மாந்தர்கள்:

ஏழ்மையினால் அப்பாவுக்கு ஏற்பட்ட கடனை அடைக்க பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறான் வேலு. கந்துவட்டியின் கொடுமை அவனை வட நாட்டிற்கு வேலைக்கு துரத்துகிறது. அவனது பெற்றோரும் ஒரு விபத்தில் இறந்துவிடுகின்றனர். தகவலை காலம் கடந்து அறியும் வேலு, அவனது முதலாளியை தாக்கிவிட்டு சென்னைக்கு ஓடி வந்துவிடுகிறான். வந்த இடத்தில் பாலியல் தொழில் செய்யும் ரோசி அக்காவின் உதவியால் ஒரு நடைபாதை தள்ளுவண்டி கடையில் வேலைக்கு சேர்கிறான். கொஞ்ச நாளில் ரோசி அக்கா காணாமல் போகிறாள். வேலுவும் ஜோதியை ஒரு மோதலில் சந்திக்கிறான். மோதல் ஒருதலைக் காதலாகி பின்னர் அவனை சிறை வரை தள்ளுகிறது. வேலுவின் கதாபாத்திரம் இயல்பைக் கடக்காமல் யதார்த்தமாக கையாளப்பட்டிருக்கிறது. வேலுவாக வரும் ஸ்ரீயின் நடிப்பும் அதற்கு பாந்தமாகப் பொருந்துகிறது.

அடுத்து கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி. இப்போதான் டி‌வி பேட்டியில், மேட்டூர் பக்கம் ஒரு கிராமத்தில் கூத்து பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த சின்னசாமி கதாபாத்திரம் உருவானதாக இயக்குனர் கூறினார். முதன்முதலில் அந்த கூத்துக் காட்சியை காட்டியிருந்தால் கண்டிப்பாக அவன் ஒரு பெண் என்றே அனைவரும் நம்பியிருப்பார்கள். அப்படி ஒரு அருமையான நடிப்பு. பெண் போல வளைந்து நெளிந்து ஆடுவதும், நக்கலான தொனியுடன் வேலுவிடம் பேசுவதாகட்டும், பின்னி பெடலெடுக்கிறான் இந்த பையன். வடபழனியில் வாய்ப்பு தேடும் இவனுக்கு சீக்கிரம் பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

ஜோதியாக வரும் ஊர்மிளா. தனது இயல்பான இளவயது சந்தோஷங்களை விட்டுவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலை செய்யும் பெண்களை நினைவுபடுத்துகிறாள் இந்த ஜோதி. எப்போதும் அமைதியாக, தெரியாமல் குறுக்கே வந்த வேலுவை சதா முறைத்துக்கொண்டு இருப்பது என்று பேசாமலேயே தனது கதாபாத்திரத்தை பேச வைக்கிறாள். அதிலும் கடைசி காட்சியில் மெல்ல அவள் உதடு துடித்தபடி முகத்திரை விலகும்போது மனது வலிக்கிறது. இனி நிஜத்தில் எந்த ஒரு பெண்ணிற்கும் இந்த கொடுமை நிகழாமல் இருக்க வேண்டுமே என்றே மனம் நினைக்கிறது. ஜோதியும் அவள் வேலை செய்யும் வீட்டிலுள்ள பெண்ணான ஆர்த்தியும் சம வயதினர்தான். ஆர்த்தி வாழ்வின் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்தபடி இருக்கிறாள். ஆனால் ஜோதி தன் வாழ்வையே ஒரு போராட்டமாக நடத்துகிறாள். இந்த முரண்பாடுதான் நமது அடையாளமா?

நகரத்து பள்ளி மாணவர்களின் வாழ்வும் இந்த படத்தின் ஒரு பகுதியாக[ஆனால் முக்கியமாக] வருகிறது. நான் பள்ளியில் படிக்கும்பொழுது உடன் படிக்கும் மாணவியருடன் அவசியம் இன்றி பேசக்கூடாது. மீறி பேசினால் ஏதோவொரு வகையில் தண்டனை கிடைக்கும். இந்த படத்தில் வரும் ஒரு மாணவி, பின் தொடர்ந்து வரும் பையனை pick-up செய்யுமாறு அறிவுறுத்துகிறாள். “பிடிச்சா continue பண்ணு, இல்லன்னா கழட்டி விட்டுடு” என்று யோசனை வேறு கூறுகிறாள். பொண்ணுங்க இப்படின்னா பசங்க எங்கடா துணி விலகும், அதை படம் எடுக்கலாம் என்று செல்போனோடு அலைகிறார்கள். பருவ வயதில் பாலியல் ஈர்ப்பு வருவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இன்று விஞ்ஞானத்தின் அதீதமான வளர்ச்சி வளர் இளம்பருவத்தினருக்கு உதவி புரிவதாக இல்லை. மாறாக அவர்களை தவறாக வழி நடத்தி படுகுழிக்கே இட்டுச் செல்வதாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் செல்போன் தடை செய்யப்படும்போது மாணவர்கள் சொன்னதை பார்த்திருப்பீர்கள்தானே?? என்ன சொன்னார்கள்? “செல்போன் இருப்பதால் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று பெற்றோருக்கு உடனுக்குடனே தெரிவிக்க முடிகிறது, நண்பர்களுடன் பாடத்திலுள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்...” இப்படி இன்னும் பல நியாயம் போல அமைந்த காரணங்கள் பல கூறினார்கள். ஆனால் இவை எல்லாம் உண்மைதானா? நிச்சயமாக இல்லை நண்பர்களே!!

விஞ்ஞானத்தின் வளர்ச்சியை நாமும் உடனே பயன்படுத்த வேண்டும் என்று எழும் ஆசை இயல்பான ஒன்றுதான். ஆனால் அதற்காக நாம் எடுத்து வைக்கும் முதல் அடி சரியான பாதையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் என்று சொல்ல முடியாத பல வழிகளிலிருந்து இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த படத்தில் பெங்களுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. நீங்கள் பொது இடங்களில் இருக்கும்போது உங்களை பல கண்கள் மேய்கின்றன. அதில் பல கேமரா கண்களும் அடக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நாகரீகம் என்று சொல்லி உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணிவதில் தொடங்குகிறது உங்களுக்கான ஆபத்து. உங்களுக்கு விருப்பமான உடை அணிவது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் அது அளவோடு இருந்தால் நலம். அளவுக்கு மிஞ்சினால்??

கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சத்யம், ஐநாக்ஸ் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்கள் இனி அவர்கள் பிள்ளைகளை எப்படி பார்ப்பார்கள்? நிச்சயமாக பிள்ளைகளின் செல்போன்கள் ஒருமுறையாவது சோதனை போடப்படும். கொஞ்சம் கண்காணிக்கப் படலாம். இதனால் நன்மை ஏதேனும் விளையுமா என்றால் இருக்கலாம். ஆனால் பெற்றோர் பிள்ளை இடையே பிரச்சினை வர வாய்ப்புகள் அதிகம். கவனத்தோடு கையாள வேண்டியிருக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

இந்த படத்தை பற்றி நல்லதான விமர்சனங்கள் வந்தபடி இருக்க, எதிர்மறை விமர்சனங்களும் வர ஆரம்பித்துள்ளன. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அச்சு பிச்சு கதாநாயகன் அறிமுகம், கதாநாயகியின் முகத்தை தவிர அவளின் உடல் பாகங்கள் அனைத்தையும் நெருக்கமாக காட்டும் மற்ற குப்பைகளுக்கு நடுவே ‘வழக்கு எண் 18/9’ திரைப்படம் நிச்சயம் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஒரு இயக்குனர் தந்தையின் நிலையில் இருந்து இளம் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த படத்தை எடுத்ததற்காக அவருக்கு ஒரு “ஓ” போடுவோம். இயக்குனர் சொல்ல வருவதும் நான் நினைப்பதும் ஒன்றேதான்.

அது.....

‘யாவரும் நலம்’

நல்லவங்க...

ShareThis