January 27, 2012

அந்த ஒரு நொடி

No comments:
 கார்த்தி தனது வலது உள்ளங்கையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம் அறை முழுக்க மெலிதாகப் பரவியிருந்தது. தன் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் உமாவை திரும்பிப் பார்த்தான். நெடு நேரம் அழுதபடியே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டிருந்தாள். கண்ணீரின் தடம் காய்ந்து அவள் முகத்தில் மெல்லிய கோடாக இருந்தது. அவள் கன்னம் சற்றே சிவந்து, வீங்கியும் தெரிந்தது.

‘ச்சே!! என்ன மனுஷன் நான்? எப்பவும் போல விளையாட்டாக முடிச்சிருக்கலாம். இல்லாத ஒரு விஷயத்துக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்.’ என்று கார்த்தி தன்னைத் தானே நொந்துக் கொண்டான். எப்போதும்போல இனிதாக தொடங்கிய பொழுது, அவர்களுக்கு அன்று இனிதாக முடியவில்லை. கவனம் தவறிய அந்த ஒரு நொடியே அவன் கண் முன் வந்தது. அன்று மாலை நடந்த சம்பவம் அவன் மனதில் திரும்ப திரும்ப அவன் நினைவில் வந்து நிம்மதி இல்லாமல் செய்தது.

அன்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியவன், உமாவை அழைத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தான். பதிலுக்கு எந்த குரலும் வராமல் போகவே இன்னும் சத்தமாக அழைத்தான். அப்போதும் பதிலில்லை. மூன்றாவது தடவையாக அழைக்க எத்தனித்தபோது அவள் உள்ளறையில் இருந்து மெல்ல புன்னகைத்தவாறே வெளியே வந்தாள். எப்போதும் அவனை மயக்கும் அந்த சிரிப்பு, இன்று எரிச்சல் மூட்டியது போல. சற்று தடித்த வார்த்தைகளால் திட்டிவிட்டான். பதிலுக்கு அவளும் பேச, இவனும் கோபமாக திட்ட காரணம் ஏதுமில்லாமலேயே அவர்களுக்குள் சண்டை நடந்தது. அவள் வார்த்தைக்கு பதில் வார்த்தை பேச முடியாத ஒரு கணத்தில் அவளை ஓங்கி அறைந்துவிட்டான்.

அந்த ஒரு நொடியில் உமா சகலமும் நொறுங்கி விட்டாள். இதுவரை எத்தனையோ தடவை சண்டை வந்திருக்கிறது. அவை எல்லாம் செல்ல சண்டைகள். அவைகளின் ஆயுள் அதிகபட்சம் ஓரிரு மணிகளே. திருமணம் ஆன இந்த ஒன்றரை வருடங்களில் கார்த்தி அவளை அடித்தது இதுதான் முதல் தடவை. அவள் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதவாறே உள்ளே சென்றுவிட்டாள். கார்த்தியும் பேசாமல் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தான். மனதிற்குள் அந்த ஆவேசம் இன்னும் இருந்தது. சிறிது நேரம் உள்ளறையில் அழுதபடி இருந்த உமா பின்னர் எழுந்து சமையலறை சென்றாள்.

வீட்டில் ஒரு விதமான அமைதி நிலவியது. தொலைக்காட்சி சத்தமும், சமையல் செய்யும் சத்தமும் மட்டுமே கேட்டது. அவ்வப்போது வெளியே வந்தவள் கார்த்தி பக்கம் கூட திரும்பவில்லை. கார்த்தி அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த உமாவை அழைத்தான். ஏதும் கேட்காதது போல அவள் உள்ளே செல்ல, இவனுக்கு மீண்டும் கோபம் வந்து எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான். சமையல் முடிந்த பின்னர் உமா அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். கார்த்தியும் அவளை சாப்பிட பல முறை அழைத்து பார்த்தான். அவளிடம் எந்த பதிலும் இல்லாததால் தானும் சாப்பிடாமலே சென்று படுத்துக் கொண்டான்.

நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தவன், உமாவை பார்த்தான். அவள் இன்னும் உறக்கத்தில் இருந்தாள். கண்டிப்பாக இது அவளுக்கு நிம்மதியான உறக்கமாக இருக்காது என எண்ணினான். அருகே சென்று அவள் கன்னத்தை மெல்ல தடவிக் கொடுத்தான். திடீரென்று ஏற்பட்ட தொடுகையால் உமா உறக்கம் கலைந்து எழுந்தாள். மணி ஒன்றை தாண்டியிருந்தது. கார்த்தியின் முகத்தை குழப்பத்துடன் பார்த்தாள். அவன் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தவுடன் கொஞ்சம் பதற்றம் அடைந்தாள். ஆனால் மாலை நடந்த சம்பவம் மனதில் தோன்றி அவளை எதுவும் பேசவிடாமல் தடுத்தது.

கார்த்தி மெல்ல அவள் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் மட்டும் இருப்பதை உணர்ந்தான். அவள் கைகளை மெல்ல அழுத்தியவாறு பேச்சை ஆரம்பித்தான்.

“என்னம்மா? இன்னும் என் மேல கோவமா?” என்றான்.

உமா பதிலேதும் சொல்லாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவள் கைகளை மெல்ல அழுத்தியவாறு மேற்கொண்டு பேசத் தொடங்கினான்.

“எனக்கு தெரியும். உனக்கு அவ்வளவு சீக்கிரம் கோவம் தீராதுன்னு. ஆனா இன்னைக்கு காரணமே இல்லாம நாம அப்படி சண்டை போட்டிருக்கக் கூடாது. இந்த ஒன்றரை வருஷத்துல பக்கத்துல இருந்தும் என்கிட்ட நீ இவ்வளவு நேரம் பேசாம இருக்கிறது இதுதான் முதல் தடவை. ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!!”

உமா இப்போது கார்த்தியின் முகத்தை சில நொடிகள் பார்த்த பின்னர் தலையை தாழ்த்தி கொண்டாள்.

“நான் உன்னை அடிச்ச அந்த நொடியில் உன் முகத்தை நினைச்சுப் பார்த்தா என் மேல எனக்கே கோவம் கோவமா வருது. நம்ம குடும்பம், வேண்டியவங்க எல்லோரையும் விட்டுட்டு இங்க வந்து தனியா இருக்கோம். நாம எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசிக்கிட்டே இருக்கலாம். ஆனால் பேசாம இருக்குற இந்த கொஞ்ச நேரம் எனக்கு ஏதோ போல இருக்கு. நான் உன்னை நல்லா பாத்துப்பேன்னு நீ என்னை எவ்வளவு நம்பியிருப்பே? அத்தனையையும் இன்னைக்கு நான் உடைச்சிட்டேன்ல?”

இதை சொல்லும்போதே கார்த்தியின் குரல் கம்மியது. பேசப் பேச அவன் உமாவின் கையை இன்னும் அழுந்த பிடித்துக் கொண்டான். கண்களில் மெல்ல கண்ணீர் துளிர்த்தது.

உமா அவன் கண்களில் வழிய இருந்த கண்ணீரை துடைத்து விட்டாள்.

கார்த்தி அவள் முகத்தை பார்த்து, “என்னை மன்னிச்சிடும்மா!!” என்றான்.

அந்த ஒரு நொடியில் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்றவளாய் அவனிடம் மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.

“சாப்பிடலாமா?”


January 22, 2012

தெர்மக்கோல் தேவதைகள் – சங்கர் நாராயண்

3 comments:

எஸ்.வி.சேகர் நாடகங்களை நகைச்சுவை தோரணம் என்று கூறுவார்கள். அவர் நாடகத்தில் வரும் துணுக்குகளை தனியாக கேட்டாலும் சிரிக்க முடியும். கதையோடும் பொருந்திப் போகும். சங்கர் நாராயணின் தெர்மக்கோல் தேவதைகளும் அப்படித்தான். சிறுகதைத் தோரணம். மொத்தம் 18 சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இவற்றில் சில கதைகள் இவர் தனது வலைப்பூவில் எழுதியவை. ஆனாலும் புத்தகமாக படிக்கும்போது ஏற்படும் அனுபவம் அலாதியானதுதான். இன்றைய மக்களின் சமகால வார்த்தையாடல்கள் கதைகளில் வருவது படிப்பவர் மனதுக்கு நெருக்கமாக உணர்வார் என்றே நம்புகிறேன். நான் உணர்ந்தேன்.

சிறுகதைகளின் தொகுப்பு என்பதால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம் என்றால், சுரேகா அவர்கள் ஏற்கனவே அந்த முறையில் எழுதிவிட்டார். இப்போ நாமும் அப்படி எழுதினால், மற்றவர் பதிவுகளை வெட்டி, ஒட்டி பிழைப்பு ஓட்டும் அந்த குழுவினருடன் நம்மையும் சேர்த்துவிடுவார்களோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனியே எழுதத் தோன்றுவதால் நான் அவன் இல்லீங்கோ!!

1. ஜன்னல் – ஆரம்பமே அதிரடியான கதை. அடுக்குமாடி குடியிருப்புகளில் நிகழும் சம்பவம். இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பும் கதை. சற்றும் எதிர்பாராத முடிவு.

2. பொறுப்பு – கடைகளில் வேலை செய்யும் சிறுவர்களின் வாழ்வு நிலையை இவ்வளவு எளிதாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருப்பது ஆச்சரியம். அதுவும் அந்த சிறுவன் பதறும்போது நமக்கும் அந்த பதற்றம் தொற்றிக்கொள்வதே கதையின் வெற்றி.

3. கப்பல் ராக்கையா – படித்தவுடன் மனதோடு நெருக்கமாகிவிட்ட கதை. வித்தியாசமான பெயர்களைக் கண்டால் அதன் வரலாறை ஆராயும் எனது மன நிலையோடு பொருந்திப் போகிற கதை. நீண்ட ஆராய்ச்சியில் பெரும் வரலாறு மட்டுமே எப்போதும் இருக்காது என்பதை உணர்த்தும் இடம் அருமை.

4. சுந்தர் கடை – “நீ நல்லா வருவே!!” என்று ஒருத்தரை வாழ்த்திவிட்டு, சில வருடங்கள் கழித்து அவர் அதே நிலையில் இருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? ஒரு மெல்லிய வலி மனதில் உண்டாவதை தடுக்க முடியவில்லை. சுந்தர் நன்றாக வர வேண்டும்.

5. ரோடு ரேஸ், நேற்றுவரை, மகாநதி – வார இதழ்களில் வரும் ஒரு பக்க கதைகள் படித்தது போல இருந்தது. நேற்றுவரை மட்டுமே கடைசி வரியில் வேப்பிலை அடித்தது.

6. காளிதாஸ் – இசையில் நல்ல திறமை இருந்தும் நிலையான இடத்தை பிடிக்க முடியாத ஒரு கலைஞனின் வலியை சொல்லும் கதை. முடிவில் வலி அதிகம்.

7. மீனாட்சி சாமான் நிக்காலோ – பள்ளி பருவத்தில் நிகழும் ஒரு சிறு சம்பவம்தான் கதை. ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.

8. கருணை – ‘திருப்பி அடித்தால்தான் இந்த உலகில் வாழ முடியும்’ என்று போராளியில் ஒரு வசனம் வரும். அதுபோல இன்றைய நிலையில் உரக்க பேசினால்தான் நமது நேர்மை வெளிப்படும். இல்லையென்றால் ‘பிழைப்பது’ கஷ்டம் என்று சொல்லும் கதை.

9. வன்மம் – இன்றைய கார்பரேட் உலகில் எல்லோருடைய மனநிலையிலும் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மன மாற்றத்தின் ஒரு துளியை படம் பிடிப்பதாகவே இருக்கிறது.

10. ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை & சேச்சு பாட்டி – காலம் காலமாக நம் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகளின் இருவேறு நிலைகள். முன்னது மூடநம்பிக்கைகளில் ஊறியிருக்கும் மக்களை ஏமாற்றும் கதை என்றாள், பின்னது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கும் ஒரு பாட்டியின் உறுதியான நம்பிக்கை.

11. பிரியாணி – பலவிதமான உணர்வுகளை உண்டு பண்ணிய கதை. மனித உணர்வுகளைப் பற்றி நம்முள் பல்வேறு சிந்தனைகளை கிளறிவிடும் தன்மையுடன் விளங்குகிறது இந்த கதை.

12. ஜெயா, ராஜலட்சுமி, ராஜீ, பிரியா (எ) பிரியதர்ஷிணி – கதையின் அசல் தேவதைகள். வெள்ளை உடையில் வந்து ஆசீர்வதிப்பவர்கள்தான் தேவதைகள் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். பலவித குண நலன்களுடன் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் அனைவரும் தேவதைகள்தான். அப்படி வெவ்வேறு குணங்களைக் கொண்ட நான்குப் பெண்களின் கதைகள் இவை. இவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவள் ராஜலட்சுமி. அவ்வளவு நம்பிக்கையான பெண், இறுதியில் எடுத்த முடிவு, நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

மிக எளிமையாக, தெளிவான நடையில் எந்தவித வார்த்தை விளையாடல்கள் இல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருப்பதில் தெர்மக்கோல் தேவதைகள் நம் நெருக்கமான தோழியாகிறாள்.

January 16, 2012

‘வேட்டை’யாடிய ‘நண்பன்’

1 comment:

இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான முக்கியமான 2 திரைப்படங்கள் நண்பன் மற்றும் வேட்டை. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் உள்ள ஒற்றுமை முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருப்பது. தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது நிகழும் அதிசயம் இது. ஈகோ பிரச்சினை தலை விரித்தாடும் தமிழ் திரையுலகில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்.

சரி!! இனி படங்கள் எப்படின்னு பாக்கலாமா?

நண்பன்:  
இந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்புதான் நம் நண்பன். மனப்பாடம் செய்து படிக்கும் நமது ஓட்டு மொத்த கல்வி அமைப்பையே கேள்வி கேட்கிறது இந்தப் படம். பத்து வருடங்களாக பார்க்காத நண்பனை தேடிச் செல்லும் நண்பர்கள் மூலமாக படம் தொடங்குகிறது.

விருமாண்டி சந்தனம் (சத்யராஜ்) 20 வருடங்களுக்கு மேலாக பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அங்கு பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்), சேவற்கொடி செந்தில்(ஜீவா), வெங்கட் ராமகிருஷ்ணன்(ஸ்ரீகாந்த்) மூவரும் பொறியியல் படிப்பதற்காக வருகிறார்கள். அங்கு இருக்கும் படிப்பு சூழல் பாரிக்கு ஒத்துவரவில்லை. எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறான். பாரியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ஆசிரியர்கள் இவனை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அதனால் பாரி எப்போதுமே out-standing மாணவன்.

 [இந்த பெயர்களையெல்லாம் யாருப்பா வெச்சது? சொல்லி முடிக்கிறதுக்குள்ள வாய் சுளுக்கிக்கும் போல. அதுவும் படத்தின் கடைசியில் ஒரு பேர் வரும். அதை சரியா சொல்றவங்களுக்கு ஒரு point.. என்ன சொல்றீங்களா?]
 செந்தில் வீட்டில் உள்ள வறுமை, வெங்கட் அப்பாவின் engineer கனவு என்று குடும்ப சூழல் இவர்களை துரத்துகிறது. வெங்கட்டிற்கு wild life photographer ஆக வேண்டுமென்பது ஆசை. ஆனால் அப்பாவின் கௌரவத்திற்காக engineering படிக்க வருகிறான். இருவருக்கும் பாரியின் நட்பு கிடைக்கிறது. பாரியின் சகவாசத்தால் இவர்கள் பெற்றது என்ன?, இழந்தது என்ன?, உண்மையிலேயே பாரி யார்? போன்ற கேள்விகளுக்கு திரையில் சிரிக்க சிரிக்க பதில் சொல்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலமே கதாபாத்திரதிற்கான சரியான தேர்வு, அதை அனைவரும் உணர்ந்து நடித்துள்ள விதம் என்று அனைத்தையும் சரிவிகதத்தில் கொடுத்துள்ளார்கள். தமிழ் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்காமல் இந்தியில் வந்த அதே திரைக்கதையை தமிழில் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர். எந்தவித சேதாரமும் இல்லாமல். இதனாலோ என்னவோ வசனமும் அப்படியே இந்தி வசனத்தின் மொழி பெயர்ப்புதான். [உன்னை யாருடா இந்தியில் பாக்க சொன்னதுன்னு நீங்க நினைக்கிறது புரியுது.] ஆனால் நேரடியாக தமிழில் பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் அருமையான படமாக இருக்கும்.

எந்த over build-up எதுவும் இல்லாமல் சாதாரணமாக அறிமுகமாகும் விஜய், எதிர்காலத்தை நினைத்து பயந்து நிகழ்காலத்தை தொலைக்கும் ஜீவா, தனது லட்சியத்தை கொன்று அப்பாவின் ஆசைக்காக இன்ஜினியரிங் படிக்க வரும் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வராக எச்சில் தெறிக்க பேசும் சத்யராஜ், எப்போதும் மனப்பாடம் செய்து முதலிடம் வரும் சத்யன் என அனைவருக்கும் இதுவரை செய்திராத கதாபாத்திரம். மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் சத்யனின் பங்களிப்பு மிக அருமை. அவரது “கற்பழிப்பு” உரையின்போது அரங்கமே சிரித்ததில் பாதி வசனம் கவனிக்க முடியவில்லை. அவ்வளவு ஆரவாரம். மிக அருமை.

நாயகியாக இலியானா. நடிப்புன்னா என்னன்னு இவருக்கு யாராவது சொல்லி கொடுத்தா தேவலை. இவர் வரும்போதெல்லாம் ஏதோ அவரைக்காய்க்கு துணி சுத்தினது போலவே இருக்கு. தவறான தேர்வு என்று தோன்றுகிறது.

என்னதான் நமது இன்றைய மனப்பாடம் செய்து படிக்கும் அடிமைத்தனமான கல்வி முறையை கேள்வி கேட்டாலும், படம் முடிந்து வரும்போது ஏதோ நகைச்சுவை படத்தை பார்த்தது போன்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.

நண்பன் – All is well..!!

வேட்டை:


 

பாக்கியராஜின் ‘அவசர போலீஸ் 100’ படத்தின் கதை, தனது முந்தைய படங்களில் இருந்து சில காட்சிகள் என கோர்த்து நம்மை வேட்டையாடியிருக்கிறார் லிங்குசாமி. தமிழ் திரையுலகில் எந்த காலத்திலும் தோற்காத குறைந்தபட்ச உத்தரவாதம் உள்ள கதை. அதில் தனது வழக்கமான அடிதடி, காதல், பாசம் என மசாலாவை கலந்து கொடுத்துள்ளார்.

பயந்தாங்கொள்ளி அண்ணனாக மாதவன், அசகாய சூரனாக தம்பி ஆர்யா. இவர்கள் குடும்பமே போலீஸ் பரம்பரை. அப்பா திடீரென இறந்துவிடுவதால் அந்த போலீஸ் வேலை மாதவனுக்கு வருகிறது. தூத்துக்குடி நகர காவல் நிலையத்தில் வேலை. அந்த ஊரையே துவம்சம் செய்யும் 2 ரவுடிகள். புதிதாக வரும் மாதவனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு மற்ற காவலர்கள் விட்டால் போதுமென ஒதுங்குகிறார்கள். ஆர்யா அனைவரையும் பொளந்து கட்ட, அண்ணன் நல்ல போலீஸ் என பெயரெடுக்கிறார். இதனால் ரவுடிகள் பாதிக்கப்படுகிறார்கள். இவங்க அவங்களை அடிக்க, அவங்களை இவங்க அடிக்க என படம் முழுவதும் யாராவது யாரையாவது அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்குதான் வலிக்கும் போல.

படத்தில் சிறப்பு என்று சொல்லப்போனால், மாதவனின் நடிப்பு. எந்த தனிப்பட்ட வளையத்திலும் சிக்காததால் இவரது பயந்தாங்கொள்ளி கதாபாத்திரம் சற்றே எடுபடுகிறது. அப்புறம் இவரது ‘solo performance’ பின்பாதியில் சரியாக இணைத்திருப்பது நல்ல உத்தி. சில காட்சிகளே வந்தாலும், நாசர் கவர்கிறார். அதிலும் நாக்கை துருத்திக் கொண்டு தப்படிக்கு போடும் ஆட்டம் தூள்.

சமீரா ரெட்டி, அமலா பால் அக்கா-தங்கை. தூத்துக்குடி பொண்ணுங்களாம். நம்பியாச்சு. அப்புறம் ஆர்யாவும் மாதவனும் திட்டம் போட்டு அமலா பால் கல்யாணத்தை நிறுத்துகிறார்கள். வேறு வழியில்லாமல் தன் தங்கையை கல்யாணம் செய்யும்படி ஆர்யாவிடம் சமீரா கெஞ்சுகிறார். சமீரா கெஞ்சும்போதே இவர்கள் திட்டம் வெற்றி அடைந்து விட்டதே!! அப்புறம் எதற்கு சமீரா தன் காலில் விழும்வரை ஆர்யா காத்திருக்க் வேண்டும்? அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பி, அண்ணி தன் காலில் விழும்போது பதறியிருக்க வேண்டாமா? அப்போதும் சிரித்தபடியே இருக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட ஆணாதிக்கக் காட்சி இது.

பாடல் காட்சிகளின்போது தியேட்டர் கேண்டீனில் நல்ல விற்பனையாம். யுவன்-லிங்கு-முத்துகுமார் கூட்டணி என்னாச்சு? ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட ‘பப்பப்பா’ பாடலும் திரையில் புஸ்ஸாகிப் போனது. இதைவிட you tube-இல் அவர்கள் வெளியிட்ட காணொளி நன்றாக இருந்தது.

கோழையாக இருக்கும் ஒருவன் வீரம் கொண்டு கெட்டவனை அழிக்கும் கதை. அதை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

வேட்டை – மயிரிழையில் வெற்றி
 

January 08, 2012

அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா

1 comment:

 முன்குறிப்பு: எல்லோருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் ‘முதல்’ என்ற இடத்திற்கு ஒரு ஆர்வம் இருக்கும். நானும் 2012 புதிய வருடத்தில் முதல் பதிவு என்ன பதிவு எழுதலாம், எதை பற்றி எழுதலாம் என்று விடை அறியும் ஆவலில் இருந்தேன். ஏனென்றால் பதிவுக்காக எழுதி வைத்த குறிப்புகள் கைவசம் நிறைய உள்ளன. அதில் எதை முதலில் எழுதுவது என்று எனக்குள்ளேயே ஒரு ஆர்வம் கிளம்பியது. ஆனாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு “என்னைப் பற்றி எழுது” என்று என் முன்னால் வந்து சண்டித்தனம் செய்தான் ‘அழிக்கப் பிறந்தவன்’.

சரி..!!! ஏன் இவனைப் பற்றி முதலில் எழுத வேண்டும்? அவன் என்ன, அவ்ளோ பெரிய ‘அப்பாடக்கரா’? (அப்பாடா!! நமக்கும் சென்னை பாஷை வந்துடிச்சி!!)

அப்பாடக்கரா இருந்தா எழுத கொஞ்சம் யோசிக்கணும். இவன் நம்ம தோஸ்து மாதிரி. அதனாலதான் படிச்சு முடிச்ச உடனே மறு சிந்தனை இல்லாமல் எழுத ஆரம்பிச்சிட்டேன்.

ஆமாங்க!! இன்னைக்கு மதியம் சென்னை புத்தக கண்காட்சிக்கு போயிருந்தேன். சென்ற வருடங்கள் போலல்லாமல் இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் தயாராக எடுத்து சென்றதால் எந்த குழப்பமும் இல்லாமல் புத்தகங்களை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். பேருந்தில் அமர்ந்தவுடன் நான் படிக்க ஆரம்பித்த புத்தகம் ‘அழிக்க பிறந்தவன்’. முதல் பதிப்பான இந்த புத்தகத்திற்கு இவ்வளவு ஆர்வம் ஏற்பட காரணம் இணையம், வலைப்பூ, முகநூல் மூலமாக யுவகிருஷ்ணா, கேபிள் சங்கர், சுரேகா சுந்தர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு. பேருந்தில் ஏறியவுடன் படிக்க துவங்கியவன், நான் இறங்குமிடம் வரும்போது கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் இருந்தேன். வீட்டுக்கு வந்து மிச்ச அத்தியாயங்கள் படித்து முடித்தவுடன்தான் ஒருவாறு சம நிலைக்கு வந்தேன்.

சரிங்க..! இவ்ளோ சொல்ற அளவுக்கு அந்த புத்தகத்துல அப்படி என்ன இருக்கு?

நாம தினமும் சர்வ சாதாரணமா கடந்து போகிற இடத்தின் கருப்பு உலகத்தை, இல்ல க்ரே உலகத்தை(ஆசிரியர் அப்படிதான் சொல்கிறார்) நமக்கு காட்டுகிறார். அச்சு அசல் அப்படியேவான்னு தெரியாது. ஆனால் அவர் கதையை எடுத்து சென்றுள்ள விதம், நிழல் உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம்மை நம்ப வைக்கிறது. நம்பிட்டேன்.

அடுத்து, இப்போதைய எதிர்பார்ப்பான ‘நண்பன்’ திரைப்படம், இயக்குனர் சங்கர், விஜய், அரசியல் என்று நடப்பு விஷயங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட விதம். ஆரம்பத்தில் படிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணினாலும், படித்து முடித்தவுடன் இவை தேவையா என்ற கேள்வியும் தோன்றுகிறது. நேரிடையாக இரண்டாம் அத்தியாத்திலிருந்து கதையை தொடங்கியிருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை.

புத்தகத்தை படிக்கும்போது என்னை மிகவும் ஈர்த்த விஷயம், பர்மா பஜாரைப் பற்றியும், அங்கு நிகழும் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். க்ரே மார்க்கெட்டின் டான் ‘வாப்பா’, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலீஸ் விசாரணை என்று சென்னையின் மறுபக்கத்தை நுணுக்கமாக விவரித்த விதம் மிக அருமை. ஊர்பக்கம் இருந்து முதன் முதலாக சென்னை வந்த பொழுது கிட்டத்தட்ட 3 மாதங்கள் சென்னையை புரிந்து கொள்ள முடியாமல் திரு திருவென இருந்தவன் நான். பின்னர் ஒருவாறு பழகிக் கொண்டேன். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பிறகு, சென்னையின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவே நினைக்கிறேன்.

இந்த புத்தகம் ஆசிரியருக்கு முதல் நாவலாம். இதையும் நம்பியாச்சு. நிருபர், வலைப் பதிவர், எழுத்தாளர் என்ற இவரின் பல நிலைகள் இந்த புத்தகத்துக்கு நல்ல ஊட்டம் கொடுத்திருக்கு. வாழ்த்துகள் யுவகிருஷ்ணா.

என்னதான் விறுவிறுப்பாக இருந்தாலும், கதையின் ஓட்டத்தில் சில குறுக்கீடுகள் இல்லாமல் இல்லை. ‘ஆள், அம்பு, படை, பணம்’ என்ற சொற்பதம் திரும்பத் திரும்ப வருவது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. , அப்புறம் மாரி கதாபாத்திரம் வாசகர்கள், அத்தியாயம் என்று திடீரென கூறுவது ஏதோ மாத நாவல் படிப்பது போல உள்ளது. இதை தவிர்த்திருக்கலாமே..!!

மொத்தத்தில் ஒரு நல்ல த்ரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தக் கதையில் இருக்கிறது. அந்த வகையில் ‘கில்லி’ போல ஒரு படம் பார்த்த திருப்தி தருகிறான் ‘அழிக்கப் பிறந்தவன்’.



நல்லவங்க...

ShareThis