June 21, 2011

பெண்ணே! பேசு...

(எனது எழுத்துப்பயிற்சியின் அடுத்த கட்டமாக, முதல் சிறுகதை ஒன்றை முயற்சி செய்துள்ளேன். படித்ததும் நிறை, குறைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் - நன்றி)




காலை 11 மணி. இடம்: பூங்கா, மிகவும் அமைதியாக இருந்தது. இது அவர்களது முதல் சந்திப்பு.

அவன் - கார்த்திக்,
அவள் - உமா

இருவருமே சற்று பதற்றமான மனநிலையில் இருந்தனர். இந்த அனுபவம் இருவருக்குமே புதிது.

----

இருவருக்கும் அவர்களது வீட்டில் திருமணம் பேசி முடித்திருந்தனர். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

அனைத்து பொருத்தங்களும் சரியாக அமைந்துள்ளதால், பெரியவர்கள் திருமணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனைந்தனர். அப்போது கார்த்திக் தன் வீட்டினரிடம் கூறினான், "நான் அந்த பெண்ணுடன் தனிமையில் மனம் விட்டு பேசனும். அப்புறம் மத்ததை முடிவு பண்ணிக்கலாம்". யதார்த்தம் உணர்ந்த அவன் பெற்றோர் இதற்கு சம்மதித்தனர். பெண் வீட்டினருக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்களுக்கும் இது சரியாகவே பட்டது.

அதன் பின்னரே இந்த சந்திப்பு.

----

சிறிது மௌனத்திற்குப் பிறகு, தயக்கம் கலைந்தவனாய் கார்த்திக் பேச ஆரம்பித்தான். தன்னைப் பற்றி, தனது விருப்பு-வெறுப்புகள் அனைத்தையும் கூறினான். உமா அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

தான் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்த கார்த்திக் அவளிடம், 'என்னங்க! நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?'.

அவள் தயக்கமாய் புன்னகைத்தாள். பட்டும் படாமல் அவன் கேட்டதற்கு பதில் சொன்னாள். அவள் தயக்கத்தை உணர்ந்து, "என்னங்க இது? எந்த தயக்கமும் வரக்கூடாதுன்னுதான் இப்படி பொது இடத்துல சந்தித்து பேச வந்திருக்கோம். இப்பவும் தயக்கம்னா எப்படிங்க?". அவள் மெலிதாக சிரித்தபடி, "அப்படில்லாம் இல்லீங்க!! என்ன பேசுறதுன்னு தெரில.. அதான். வேற ஒண்ணும் இல்ல!!!"

அவன் இப்போது பலமாக சிரித்தான். "அப்பாடா பேசிட்டீங்க!! இது போதும்... அப்புறம் உங்களுக்கு எங்கிட்ட ஏதாவது கேக்கனுமா?" அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

கார்த்திக் தன் பையிலிருந்து ஒரு பிங்க் நிற கவரை எடுத்து அவளிடம் நீட்டினான். உமா புரியாமல் அவனை என்ன இது? என்பதுபோல் பார்த்தாள். அவன் கூறினான், "இது ஒரு வாழ்த்து அட்டை. உங்களுக்கு மனசார என்னை பிடிச்சதுன்னா இதை வீட்டில் வைத்து படிச்சுப் பாருங்க!! நம்ம முதல் சந்திப்புக்கு இது ஒரு அடையாளமாக இருக்கட்டும்."

"ஒருவேளை என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா, இந்த கவர் மேல என் விலாசம் எழுதியிருக்கேன். இதை பிரிக்கனும்னு அவசியம் இல்லை. எனக்கு திருப்பி அனுப்பிடுங்க. நான் புரிஞ்சுக்குவேன்".

"இது கண்டிப்பா அவசியமா?" என்று உமா கேட்டாள்.

கார்த்திக் "அதை நீங்கதான் முடிவு பண்ணனும்" என்றான்.

உமா அந்த கவரை தன் கைப்பையில் வைத்துக்கொண்டாள். இருவரும் ஆளுக்கொரு சிந்தனையுடன், புன்னகைத்தபடி விடைபெற்றனர்.

----------------

திருமணம் முடிந்த சில மாதங்களுக்குப் பின்...

ஒரு விடுமுறை தினத்தின் பின்மாலைப் பொழுது....

"உமா... என்னோட டைரியை பாத்தியா?" என்று படுக்கையறையில் இருந்து குரல் கொடுத்தான் கார்த்திக்.

உமா சமையலறையில் இருந்து "நான் பாக்கலீங்க!! அங்கதான் எங்கயாச்சும் இருக்கும்!! தேடிப்பாருங்க!!!" என்று கூறினாள்.

அறையின் சுவர் அடுக்குகளில் தேடி எங்கும் அந்த டைரி அகப்படவில்லை. அங்கிருந்து நகர்ந்து அருகிலிருந்த பீரோவை திறந்தான். தன் துணி இருந்த அடுக்கில் தேடினான். அங்கேயும் இல்லை. எங்கே போயிருக்கும் என்று எண்ணியபடி மற்ற அடுக்குகளில் தேட ஆரம்பித்தான். தேடலின் முடிவாக உமாவின் புடவைகளுக்கு பின்னால் அந்த டைரி ஒளிந்திருந்தது. மனம் நிம்மதி அடைந்தவனாய் கை விட்டு அந்த டைரியை எடுத்தான். பழைய நண்பர்களின் தகவல்கள் அந்த டைரியில்தான் இருந்தது.

டைரி எடுக்கும்போது எதோ ஒன்று கையில் தட்டுப்பட, அதையும் வெளியே எடுத்தான். அது ஒரு பிங்க் நிற கவர். திருப்பிப் பார்த்தான். பெறுனர் என்று அவன் விலாசம் இருந்தது.

அவன் உமாவை முதன்முதலில் சந்திக்கும்போது அவளிடம் கொடுத்த அதே பிங்க் நிற கவர்.

பிரிக்கப்படாமலே இருந்தது...

-----------------------------------

 ஓவியம் நன்றி: ஓவியர் இளையராஜா

1 comment:

நல்லவங்க...

ShareThis