July 24, 2011

வீரத்தாய் வேலுநாச்சியார் - நாட்டிய நாடகம்

சென்னை காமராஜர் அரங்கத்தில் வீரத்தாய் வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நாட்டிய நாடகமாக அரங்கேற்றியிருந்தார்கள். 


முதன்முறையாக நாரதகான சபாவில் அரங்கேற்றப்பட்டது. இது இரண்டாவது முறை. எனக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. நான் மேடை  நாடகம் பார்ப்பது இதுவே முதல் முறை. அதுவும் இசையும், நடனமும் கலந்த நாட்டிய நாடகம் பார்க்க மிக ஆவலுடன் சென்றேன். எனது ஆவலை மிகவும் நல்ல முறையில் நிறைவேற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்.


60 நடனக் கலைஞர்கள், சிறந்த இசை, எளிய தமிழில் வசீகரக் குரலில் அருமையான வர்ணனை, சிறந்த ஒலி-ஒளி அமைப்பு என தேவையான அனைத்தையும் சரிவிகித்ததில் கொடுத்துள்ளார்கள்.

தயாரிப்பு: வைகோ,
இயக்கம்: ஸ்ரீராம் சர்மா,
நாட்டியம்: மணிமேகலை சர்மா மற்றும் எகுழுவினர்,
இசை: ரகுநாதன்

வர்ணனைக்கு செல்லும் முன் வேலுநாச்சியார் பற்றிய சிறு அறிமுகம்:



1749-1772 சிவகங்கை சீமையை ஆண்டு வந்த முத்துவடுகநாதரின் மனைவிதான் வேலுநாச்சியார் அவர்கள். வெள்ளையன் இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்து மெல்ல மெல்ல தனது ஆட்சியை நிறுவ ஆரம்பித்த காலக்கட்டம். ஆற்காட்டு நாவாபுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நவாப் ஆளுகைக்கு உட்பட்ட பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை வெள்ளையன் பெறுகின்றான். இதை அறிந்த முத்துவடுகநாதர் சினம் கொள்வதோடு, வரி கொடுக்கவும் மறுத்துவிடுகிறார். இதனால் அவமானப்பட்ட வெள்ளையன் ஒரு தந்திரம் செய்கிறான்.


குலவழக்கப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முத்துவடுகநாதர் சிவ வழிபாட்டிற்க்கு செல்வது வழக்கம். அதே நேரத்தில் வரி பற்றி பேச வெள்ளையன் வருகிறான். கணவனை கோவிலுக்கு அனுப்பிவிட்டு வேலுநாச்சியார் வெள்ளையனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நிராயுதபானியாக கோவிலுக்கு சென்றவரை நயவஞ்சமாக மறைந்திருந்து கொல்கிறான் வெள்ளையன். கணவன் பிரிவைத் தாங்காமல் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறார் வேலுநாச்சியார். தளபதிகளான மருது சகோதரர்கள் அவரை சமாதானப்படுத்தி மக்கள் நிலையை எடுத்துக் கூறுகிறார்கள். "மன்னனை இழந்த மக்கள், சரியான தலைமை இல்லாமல் துன்பப்படுவார்கள். சிவகங்கை சீமையின் நலன் பொருட்டு தாங்கள் இருப்பது அவசியம்" என்று கூறுகிறார்கள். பின்னர் தனது கணவரைக் கொன்ற வெள்ளையனையும், அதற்கு துணை போன நவாபையும் அழித்து சிவகங்கை சீமையை மீட்க உறுதி கொள்கிறார் வேலுநாச்சியார்.


இதனிடையே வெள்ளையன் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறான். அதாவது, "எந்த ஒரு நாட்டில் ஆண் வாரிசு இல்லையோ, அந்த நாட்டை இனி கிழக்கிந்திய கம்பெனியே ஏற்று நடத்தும்" என்பதுதான் அது. இந்த சட்டத்தின்படி சிவகங்கை சீமை வெள்ளையன் ஆளுகைக்குப் போகின்றது. அவர்களிடம் இருந்து வேலுநாச்சியார் தப்பித்து ஒரு காட்டு வழியே பயணமாகிறார். நீண்ட நெடும் பயணம், பசி, தாகம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தாக்க ஒரு இடத்தில் மயங்கி விழுகிறார். அங்கே மாடு மேய்த்துக்கொண்டிருந்த உடையாள் என்ற பெண், பதறிப்போய் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிவிக்கிறாள். தான் காப்பாற்றியது வேலுநாச்சியார் என்று அறிந்ததும் பதறிப் போகின்றாள். உடையாளுக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறார் வேலுநாச்சியார்.

வேலுநாச்சியாரை பின்தொடர்ந்து வந்த வெள்ளையன், உடையாள் இருக்குமிடம் வருகிறான். உடையாளிடம் வேலுநாச்சியார் பற்றி கேட்க அவள் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறாள். ஆத்திரமடைந்த வெள்ளையன் அவளை கொன்றுவிடுகின்றான்.[பின்னாளில், வேலுநாச்சியார் தோற்றுவித்த பெண்கள் மட்டுமே கொண்ட படைக்கு "உடையாள் படை" என்று பெயரிட்டார். மேலும் உடையாள் உயிர் நீத்த அதே இடத்தில் உடையாள் நினைவாக ஒரு கோயிலையும் கட்டியுள்ளார்.]

ரகசிய இடத்தில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மற்ற ஏனையோரும் சந்திக்கின்றார்கள். சிவகங்கை சீமையை மீட்பது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. வேலுநாச்சியாருக்குத் துணையாக 18 பாளையக்காரர்கள் வருகிறார்கள். ஆனாலும், நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் வெள்ளையனுடன் மோத நமது ஆயுதங்கள் போதாதே!! அப்போது சின்ன மருது "திண்டுக்கல்லில் இருக்கும் ஹைதர் அலியிடம் உதவி கேட்கலாம்" என்று யோசனை கூறுகிறார். வேலுநாச்சியாரின் துணிவைக் கண்ட ஹைதர் அலி, வேண்டிய மட்டும் உதவி செய்வதாகக் கூறுகிறார்.

8 ஆண்டுகள், போதிய ஆள் பலம், ஹைதை அலியின் உதவி, பாளையக்காரர்களின் துணை என்று ஒரு பெரும்படை உருவாகிறது. அனைவரும் போருக்குத் தயாராகின்றனர். ஆனால் வேலுநாச்சியாருக்கு மட்டும் ஒரு சிந்தனை ஓடியது. என்னதான் படைபலத்தை உருவாக்கினாலும், எதிரி பலவீனமடைந்தால்தான் நமக்கு வெற்றியே!! அதனால் முதலில் அவர்களது ஆயுத பலத்தை குறைக்க முடிவு செய்கிறார். வெள்ளையனின் ஆயுதக்கிடங்கு, கோட்டையினுள் இருந்த ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு பின்புறம் இருந்தது.



சிவகங்கையைக் கைப்பற்றிய வெள்ளையன், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க ஒரு சலுகை வழங்கினான். விஜயதசமி, நவராத்திரி போன்ற சிறப்பு தினங்களில் மக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வர அனுமதித்திருந்தான். இதை வேலுநாச்சியார் சரியாக பயன்படுத்திக்கொண்டார். சரியாக நவராத்திரி அன்று பெண்கள் அனைவரும் கையில் விளக்குடன் கோவிலுக்கு சென்றனர். ஆயுதக்கிடங்கை நெருங்கியவுடன், குயிலி என்ற பெண், அனைவரின் விளக்கிலிருந்த எண்ணையை வாங்கி தன் மேல் ஊற்றிக் கொண்டாள். பின்பு தன்மீது நெருப்பு வைத்துக் கொண்டு ஆயுதக்கிடங்கினுள் குதித்தாள்[அனேகமாக, உலகின் முதல் மனித வெடிகுண்டு இவள்தான்]. ஆங்கிலேயரின் தளவாடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது.

பின்பு வேலுநாச்சியார், தனது படையை மூன்றாகப் பிரித்து வெள்ளையனைத் தாக்கினார். இந்த மும்முனைத் தாக்குதலை வெள்ளையனும், நவாபும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், வெள்ளையனின் படைகளைத் தாக்கி அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன. சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. எட்டு ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு, வேலு நாச்சியார் சிவகங்கை சீமையின் அரசியானார்.

----------

இந்த சிறப்புமிக்க வரலாற்றை மேடையேற்றுவது மிகவும் கடினம். அதுவும் நாட்டிய நாடகமாக அரங்கேற்ற மிகுதியான உடலுழைப்பு தேவை. அதை இந்த நாடகத்தின் இயக்குனர் மிகவும் கவனமாகவும், சரியாகவும் செய்துள்ளார். இது ஒண்ணும் சினிமா இல்லையே!! ஒண்ணு சரியில்லைன்னா இன்னொரு டேக் போலாம்ன்னு சொல்றதுக்கு. மக்கள் முன்னாடி நேரிடையாக நடிக்க வேண்டும். கதை சொல்லல் சரியான முறையில் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் இருக்க வேண்டும். முக்கியமாக நடிகர்களின் ஒத்துழைப்பு மிகச் சரியாகப் பொருந்தி வரவேண்டும். 

இந்த நாடகத்தில் எல்லாம் சரியாகவே இருந்தது. இதற்கு சாட்சி, ஒவ்வொரு காட்சிக்கும் இடைவிடாமல் கிடைத்த கைத்தட்டல்தான். மேடை நாடக நடிகர்களுக்கு கைத்தட்டல்தான் மிகப்பெரிய அங்கீகாரம். ஏனென்றால், நல்லதை உடனுக்குடன் கைத்தட்டி பாராட்டு நம் மக்கள், பிடிக்கவில்லையென்றால் கையில் கிடைத்ததையெல்லாம் மேடையில் வீசச் செய்வார்கள்.

முதலில் இந்த நாட்டிய நாடகம், வரலாற்றின் வர்ணனையுடன் தொடங்குகிறது. தெளிந்த தமிழில், வசீகரக் குரலில் வர்ணனையாளர் பார்வையாளர்கள் அனைவரையும் காலம் கடத்தி விடுகிறார் [யாருங்க அவரு? மேடையில எல்லோருடைய பேரும் சொன்னாங்க.. ஆனா இவர் பேரை விட்டுட்டாங்க..].

சிவகங்கை சீமை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடங்குகிறது இந்த நாட்டிய நாடகம். அப்போது நமது கிராமிய இசையுடன், அவர்கள் நடனம் மிக அருமை. அவர்கள் சொல்ல வந்த அந்த குதூகலமான மனநிலை எனக்கும் வந்தது[குழுவினரின் முதல் வெற்றி]. பின்பு, வேலுநாச்சியார் அறிமுகம், வெள்ளையன் அறிமுகம் என நாட்டியமாகவே வருகிறது. வேலுநாச்சியார் பரதம் ஆடியபடி தமிழின் சிறப்பு, மண்ணின் சிறப்பு பற்றி பாடுகிறர். அடுத்து வந்த வெள்ளையன்(ரியாஸ் கான்) ஆங்கிலத்தில் பாட்டு பாடி ஆடுகிறார். இருவரின் அறிமுகமும் அவர்களின் நிலைக்கேற்ப மிகச் சரியாக கோர்வையாக வருகிறது.

முத்துவடுகநாதர் கொல்லப்படுகிறார். வெள்ளையனிடமிருந்து வேலுநாச்சியார் தப்பிக்கிறார். உடையாள் உதவி, பின்பு அவள் கொல்லப்படுவது என அனைத்தும் தெளிந்த நீரோடை போல அந்தந்த உணர்வுகளுடன் சொல்லப்படுகிறது. இதில் முக்கியப் பங்கு வர்ணனையாளருக்குத்தான் சேரும். மருது சகோதரர்கள் பகுதி வசனமாகவே வருகிறது. ஹைதர் அலி வரும் காட்சியில், முஸ்லீம்களுக்கான இசை இசைக்கப்படுகிறது. நல்ல உத்தி. ஹைதர் அலி, வேலுநாச்சியாரை சகோதரி என்று பாடும்போது அரங்கில் கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது. பின்னர் 18 பாளையக்காரர்களின் அறிமுகம். அனைவரையும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வரவழைத்தது நல்ல காட்சியமைப்பு. வேலுநாச்சியாருக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை சொல்லாமல் சொன்னதுபோல் எனக்கு தோன்றியது.

அடுத்ததாக குயிலியின் தற்கொலைத் தாக்குதல். குயிலியாக நடிகை பிரியதர்ஷினி நடித்திருந்தார். இசையும், நடனப் பெண்கள் கையில் விளக்குடன் ஆடிய நடனமும் அனைவரையும் ஒரு பரவச நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த இடத்தில் முக்கியமாக சொல்ல வேண்டியது இசையைதான். இவர்கள் நாடு மீட்புப் போராட்டத்தில் முக்கிய கட்டம் வகிப்பது குயிலியின் தற்கொலைத் தாக்குதல். அந்த சம்பவத்தின் வீரியத்தை ரகுநாதனின் இசை இம்மியும் குறையாமல் கொடுத்தது. இசைக்கு அதிக கைத்தட்டல் வாங்கியது இந்த இடத்தில்தான். மிகச் சிறப்பான இசை. கூடவே பிரியதர்ஷினியின் ஆவேசம் கலந்த நடனம், உடன் ஆடிய பெண்களின் கலவையான உணர்வுகொண்ட நடனமும் அந்த சம்பவத்தை நன்றாக உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

அடுத்து வந்த போர்க்களக் காட்சி. இங்கும் இசையே பெரும்பங்கு வகித்தது. இரண்டு பீரங்கிகளையும் மேடைக்குக் கொண்டு வந்து போர்க் காட்சியின் நம்பகத்தன்மையைக் கொண்டுவர முயன்றிருந்தார்கள். வாழ்த்துகள்!!



இந்த வரலாற்றின் மூலம் நாம் அறிவது:

இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராளி ஜான்சி ராணி அல்ல, வேலுநாச்சியார்தான். ஜான்சி ராணிக்கு 77 ஆண்டுகள் முன்பே வெள்ளையருக்கு எதிராகப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர்.

-------

இந்த நாடகத்தின் மூலமாக ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. நம் மக்கள் ஏதோ ஒரு தேடலில் இருக்கிறார்கள். நமது வேர்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறார்கள். அதற்கு இந்த நாட்டிய நாடகமே சாட்சி. அனைத்து இருக்கைகளும் நிறைந்த பின்பும், கிடைத்த இடத்தில் அமர்ந்து பார்த்தார்கள். இது போன்ற சரித்திரங்கள் நம்மிடம் ஏராளமாக உண்டு. அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு நம் அனைவருக்கும் நிச்சயம் உண்டு. இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னை மட்டுமல்லாது, அனைத்து ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும்.

மீண்டும் இந்த நாட்டிய நாடகக் குழுவினருக்கும், அதை தயாரித்து அளித்த வைகோ அவர்களுக்கும் வாழ்த்துகள்.

[குறிப்பு: அரங்கினுள் படம் எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், இணையத்தில் கிடைத்த படங்களை இங்கு பயன்படுத்தியுள்ளேன்...]




1 comment:

  1. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis