December 17, 2011

'அணை'த்து செல்வோம்!!!


அவ்வப்போது மெல்ல தலை காட்டும் ‘முல்லைப் பெரியாறு’ பிரச்சினை இப்போது மொத்தமாகக் கிளம்பியுள்ளது. போன மாதம் வரையில் இதன் ஆதி, அந்தம் என எதுவும் தெரியாதவர்கள் இன்று அந்த அணையைப் பற்றிய வரலாற்றை பல கோணங்களில், அவரவர் பார்வைபடி அவரவர் விருப்பத்திற்கேற்ப அறிந்திருப்பார்கள். 
 

அதுவும் இணையத்தின் பலத்தால் நாளொரு செய்தியும், பொழுதொரு காணொளியுமாக முல்லைப் பெரியாறு அணை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் திடீர் தமிழுணர்வால் உந்தப்பட்டவர்கள் செய்யும் செயல்கள்தான் வியப்பும், அருவருப்பும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. நம்மை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அந்த பிரச்சினையின் வேர் என்ன என்பதை அறியாமல் பதிலுக்கு அவர்களை எதிரிகளாக சித்தரிப்பதே இவர்களுக்கு வேலையாகப் போய்விட்டது. இந்த ‘திடீர் வீரர்கள்’ இத்தனை நாள் எங்கே இருந்தார்கள் என்றுதான் தெரியவில்லை. பென்னி குயிக் எதற்காக இந்த அணையை கட்டினார், எவ்வாறு கட்டினார் என்பதை சுலபமாக மறந்து விட்டார்கள். நம்மை திட்டுபவன், நம்மோடு சண்டை போடுபவனெல்லாம் எதிரி என்றால், அப்புறம் நாளை நாம் பேசிப் பழக ஒரு பயலும் சிக்க மாட்டான். வாழ்நாள் முழுக்க யாராவது ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும். 
 
 
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை கடந்த 50 வருடங்களாக இருந்து வருகிறது. அணை பற்றிய தவறான தகவல்கள் திட்டமிட்டு வெவ்வேறு காலகட்டங்களில் கேரள அரசால் பரப்பப்பட்டு வந்துள்ளது. அதை தமிழக அரசும் தனது உரிமையை விட்டுக்கொடுக்காமல் கையாண்டு வந்தது. கடந்த 50 வருடங்களாக இந்த பிரச்சினை அரசியல் ரீதியாகவே கையாளப்படுகின்றது. அப்படி இருக்கும் நிலையில் நாம் அனைவரும் நமது நிலைப்பாட்டை, ஆதரவை அரசுக்கு ஒருமுகமாக அளிக்க வேண்டுமே தவிர, ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல அவனவன் தனியாகக் கிளம்புவதால் யாதொரு பயனும் இல்லை.

சரி!! பொதுமக்கள்தான் இந்த பிரச்சினையின் வரலாறு தெரியாமல் போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ‘மக்களுக்காக உழைப்போம்’ என்று மார்தட்டும் அரசியல்வியாதிகள் என்ன செய்கிறார்கள்? இது போன்ற மாநிலம் தழுவிய பிரச்சினையில் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் போராட்டமாக நடத்தி நமது எதிர்ப்பை மத்திய அரசுக்கு பலமாகக் காட்டியிருக்க வேண்டாமா? ஆளுக்கொரு நாள் என பங்கு பிரித்து கூட்டம் கூட்டி மேடையேறி பேசிட்டா போதுமா? அதுக்கு மேல அவங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?

எல்லா அரசியல்வியாதிகளுக்கும் அடிப்படையாக ஒரே ஒரு கொள்கைதான் வைத்திருக்கிறார்கள். “பிரச்சினை என்று எது வந்தாலும், அதை பற்றி தான்தான் பேச வேண்டும், நடக்கும் நல்லது எல்லாம் தன்னால்தான் நடக்க வேண்டும்” என்ற அளப்பரிய கொள்கைதான் அது. இப்போ இந்த மனோவியாதி எல்லோரிடமும் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவுதான் இன்று பூதாகரமாக கிளம்பியுள்ள ‘முல்லைப் பெரியாறு’ அணை பிரச்சினை.

மத்திய அரசிற்கு பெரும் தலைவலியாக இருப்பது 2G Spectrum ஊழல் குற்றச்சாட்டும், கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையும்தான். இரண்டும் மையம் கொண்டிருப்பது தமிழ்நாட்டில். ஆக, தனக்கு ஏற்பட்ட தலைவலிக்கு மருந்தாக ‘முல்லை பெரியாறு’ அணைப் பிரச்சினையை மத்திய அரசு பயன்படுத்திக்கொண்டது. கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சிதான். இதனால் மத்திய அரசின் எண்ணம் மிகச் சுலபமாக நிறைவேறிவிட்டது. மக்களோட அடிப்படை தேவையிலேயே கை வெச்சா மத்த பிரச்சினை பத்தி யோசிக்கத் தோணுமா?  தோணாதில்லை?? அதைத்தான் மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது

ஈழப் போராட்டத்தின்போதே நமது ஒற்றுமை உணர்வைப் பற்றி மத்திய அரசுக்கு தெரிந்துவிட்டது. எவ்வளவு சத்தம் போட்டு போராடினாலும், கொஞ்சம் தட்டினால் நாம் அடங்கிவிடுவோம் என்று நம்மைப் பற்றி நான்கு புரிந்துவைத்துள்ளது. இப்பவும் கொஞ்ச நாள் பார்ப்பார்கள். அப்புறம் நம்மை தலைமேல் தட்டி உட்காரவைக்க முயல்வார்கள். விடலாமா? நாமும் உரிமை, தமிழ், மலையாளம் என்று என்ன காரணம் கூறிப் போராடினாலும் அடிப்படை வரலாறு தெரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையோடு இந்த பிரச்சினையை அணுகினால் மட்டுமே இருபக்கமும் நலம் பயக்கும் முடிவை எடுக்க முடியும். ஆனால் இன்றைய அரசியல் சூழல் அப்படி ஒரு நல்ல முடிவை எடுக்க அனுமதிக்குமா? 
 
 

1 comment:

  1. மிகச் சரியான சிந்தனை
    அருமையான அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
    பதிவுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis