December 04, 2011

போராளி

ஒரு தனி மனிதன் தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்காகவும் போராடும் வாழ்க்கையே ‘போராளி’. போராளி என்ற பெயர் வைத்தவுடனேயே இது சமூகம் சார்ந்த மக்களுக்கான ஒரு போராளியின் கதை என்று பரவலாக பேச்சு நிலவியது. ஆனால் கனி(சமுத்திரக்கனி)-சசி இருவரும் இது ஒரு தனி மனிதனின் போராட்டம் என்று ஆரம்ப நிலையிலேயே அதனை தெளிவுபடுத்தியிருந்தார்கள். அதனால் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும். 
 

சரி, போராளி படத்தின் கதை என்ன?

சிறுவயதிலேயே மிகவும் அதிபுத்திசாலி சசிகுமார். இவரின் நண்பர் ‘பரோட்டா’ சூரி. சசியின் புத்திசாலிதானத்தை பொறுக்க முடியாமல் அவரது படிப்பையும் நிறுத்தி பைத்தியம் என்றும் ஊர் முழுக்க சொல்லிவிடுகிறார் அவர் சித்தி (அப்பாவின் இரண்டாம் தாரம்). குடும்பம், குழந்தை எதுவும் இல்லாத சசியின் பெரியப்பா தனது சொத்துக்கள் அனைத்தையும் சசியின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகின்றார். தங்களது விற்காத நிலத்தில் ‘யுரேனியம்’ இருப்பதால் நிலம் பெரும் விலைக்கு பேசப்படுகின்றது. ஆனால் சொத்துக்கள் அனைத்தும் சசியின் பெயரில் இருப்பதால் அதை விற்க முடியாமல் அவரை பைத்தியம் என்று மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். அங்கு தனக்கு அறிமுகம் ஆகும் அல்லரி நரேஷுடன் தப்பி சென்னை வருகின்றார். சென்னையில் அவர் வாழ்வை நிலை நிறுத்த எடுக்கும் போராட்டமும், தன் குடும்பத்தாரின் துரத்தல்களை எதிர்கொள்ளும் நிலைதான் ‘போராளி’.

மனநல காப்பகத்திலிருந்து இருவரும் தப்பிப்பதிலிருந்து தொடங்கி இடைவேளை வரை படம் நகரும் வேகமே தெரியவில்லை. பெரும்பாலும் இடைவேளைக்கு முன்தான் கதையே தொடங்கினாலும் முன்னதாக வரும் காட்சிகளும் அதன் கோர்வை நேர்த்தியும் மிகவும் சுறுசுறுப்பாக நகர்கிறது.

 
 

‘நாடோடிகள்’ படத்தைப் போலவே இதிலும் நண்பர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பின்பு ஆப்பு வாங்கும் கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு. மனிதர் பின்னியிருக்கிறார். அதுவும் சசி-நரேஷ் இருவரையும் ஒரு கும்பல் துரத்த இடையில் வரும் இவரும் காரணம் தெரியாமல் ஓடிக்கொண்டே புலம்பும் காட்சி அட்டகாசம். ஆனாலும் ‘வெச்சு அடிப்பது’ ஏற்கனவே வடிவேல் பண்ணிட்டாரே!!! வேற மாதிரி பண்ணியிருக்கலாம். நகைச்சுவைக்கு அடுத்து உத்திரவாதம் கொடுப்பவர் ‘பரோட்டா’ சூரி. மனிதர் திரையில் வந்தாலே என்ன ஒரு கைத்தட்டல். அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து நன்றாகவே சிரிக்க வைக்கின்றார்.
 
 
 
நரேஷ் – குறும்பு படத்தில் விடலை சேட்டைகள் பண்ணியவர். அக்கட தேசத்தில் பிரபலமான நடிகர். சும்மா சொல்லக்கூடாது. சேட்டைகள் இன்னும் அதிகமாகவே செய்கிறார். ‘மூன்று புள்ளி அப்புறம் ஆச்சரியக்குறி’ என்று கவிதை சொல்லும்போதும், எதிர்வீட்டு சாப்பாட்டை சாப்பிடும்போதும் இவரது சேட்டைகள் செம ரகளை. பின்னர் வில்லன்களின் துரத்தல்களால் மனநிலை தடுமாறும்போது அழகான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

நடிகைகளில் நிவேதா பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் கதை ஓட்டத்திற்கு நன்றாக உதவுகிறார். ஸ்வாதி ஆரம்பத்தில் இருவரையும் கண்டு வெறுத்து பொரிந்து தள்ளினாலும், அவரது நிலையில்லாத வாழ்க்கை அதை ஞாயப்படுத்துகிறது. சசி இவருடனான ‘அண்டா’ காதல் மிக சுவாரஸ்யம். படத்தின் பின்பாதியில் வரும் வசுந்தராவுக்குதான் நடிப்பதற்கான வாய்ப்பு. அதுவும் சசியை காப்பாற்ற அவர் போதும் சண்டை மிக உக்கிரம். இதுவரை எத்தனையோ படங்களில் நடிகைகள் சண்டை போட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தமாக முகத்தில் அவ்வளவு கோப உணர்ச்சிகளைக் காட்டி இவர் போடும் சண்டை மிக நன்று. கொஞ்ச நேரமே வந்தாலும் நினைவில் இருக்கும்படியான கதாபாத்திரம்.

 
 
சசிகுமார் – இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஈசனில் விட்டதை இந்த படத்தில் பிடித்துவிடுவார் என்றே தோன்றுகிறது. நடிப்பை பொறுத்தவரை இவருக்கு சரியாகப் பொருந்தும் கதாபாத்திரம். அனைத்து படங்களிலும் நட்பைப் பற்றி பெருமையாகப் பேசினாலும் அலுக்கவில்லை. மாறாக அவர் எது சொன்னாலும் அது நல்லதுதான் என்றே தோன்றுகிறது. அவர் சிரித்தால் ஒரு ஈர்ப்பு, திட்டினால் ஒரு வலி, அக்கறையாகப் பேசினால் கேட்கத் தோன்றுகிறது. ஏதோ நம் வீட்டு அண்ணன் போன்ற தோற்றம். சசிண்ணே!! இப்படியே தொடருங்கள். பாதை மாறிடாதீங்க.. அப்புறம் அந்த இரட்டைக் குதிரை சவாரி. இடைச்செருகல் என்றாலும் மிகச் சரியான செருகல்.
 
 
படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு மிகவும் துணை புரிகின்றனர். அந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் வரும் பேராசிரியர் ஞானசம்பந்தன், மாடி வீட்டு பேச்சிலர், இரு குட்டிப் பெண்கள், சதா சண்டை போடும் தம்பதியர், ஏஞ்சல் பாட்டி, பிச்சைக்காரனாக வருபவர், petrol bunk முதலாளி இப்படி பலர். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையே அவர்கள் திரையில் வரும்போது கைத்தட்டல் அள்ளுகின்றது. இதுவே கனியின் வெற்றி.

படத்தின் அடுத்த பலம் வசனங்கள். “எனக்கு சிலோனே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டா வேணுமாம்”, “நாங்கல்லாம் அப்போவே அப்படி!! இப்போ சொல்லனுமா??”, “இன்னும் எத்தனை காலத்துக்கு ஓடப்போறோம்?”, “இந்த ஊர்லயும் அவனுக்குன்னு சில நல்லவங்க இருக்காங்கடா!! அவன் மேல கை வெச்சீங்க.... செத்தீங்க!!!”, “உடம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு அவ்ளோ அக்கறை காட்டுற நாம, மனசு சம்பந்தப்பட்ட பிரச்சினைன்னா தள்ளி வெச்சிடுறோம்.” இப்படி பல வசனங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

இசை - சுந்தர்.சி.பாபு. நாடோடிகள் படத்தின் இசையைவிட ஒரு மாற்று கம்மிதான். ஆனாலும் அந்த தீம் பாடலும் பின்னணி இசையும் படத்தின் வேகத்துக்கு சரியாக ஈடு கொடுக்கின்றது. தீம் பாடலுடன் வரும் சசியின் வீறிட்ட கர்ஜனை சும்மா அடிவயித்தில பாய்கின்றது. அப்புறம், நாடோடிகள் படத்தில் வரும் அந்த குத்துப் பாடல் தேவையில்லாத இடைச்செருகல் என்று பலமான கருத்து ஒன்று நிலவியது. இயக்குனர் இந்த படத்தில் சாமர்த்தியமாக டைட்டில் காட்சிகளில் குத்துப் பாட்டை நுழைத்துவிட்டார். “இப்ப என்ன செய்வீங்க??”

 
 
ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர். எந்த உறுத்தாலும் இல்லாமல் நம்மை படத்தையொட்டி பயணிக்கச் செய்கின்றது. அதுவும் அந்த துரத்தல் காட்சிகளில் சுப்ரமணியபுரம் படம் நினைவுக்கு வந்தாலும் அந்த காட்சிக்கான பரபரப்பு நம்மை தொற்றிக்கொள்கிறது. நகரம் சார்ந்த காட்சிகளில் ஒரு நிறம், கிராமம் சார்ந்த காட்சிகளில் ஒரு நிறம், சண்டை காட்சிகளில் ஒரு நிறம் என்று ஒவ்வொரு நிலையையும் மிகச்சரியாக வேறுபடுத்திக் காட்டுகின்றது.

படத்தின் முன் பாதி நகைச்சுவை, சக மனிதனின் மீது அன்பு காட்டுவது, சுயதொழில் யோசனை, என்று நேரம் போதே தெரியாமல் நகர்ந்தாலும் பின்பாதியில் முன்னுக்குப்பின் வரும் flashback காட்சிகள் சற்று கொட்டாவி விடவே செய்கின்றன. அதிலும் பரோட்டா சூரி இல்லை என்றால் ரொம்பவே சோதித்திருக்கும். முன் பாதியில் உள்ள விறுவிறுப்பை, பின்பாதி திரைக்கதையிலும் சேர்த்திருந்தால் போராளி இன்னும் பட்டையை கிளப்பியிருப்பான்.

வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis