February 18, 2012

நல்லவன் - 50

சென்ற பதிவான ‘தோனி’யுடன் 50-வது பதிவை தொட்டுவிட்டேன். இந்தப் பதிவுதான் 50-வதாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தோனி என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அவன் தானாக வந்து அந்த இடத்தை பிடித்துக் கொண்டான். மகிழ்ச்சி. 2008-ல் எழுத ஆரம்பித்திருந்தாலும் மிகத்தீவிரமாக எழுத ஆரம்பித்தது 2011-இல்தான். ஆனாலும் இந்த குறுகிய காலத்தில் எனது எழுத்துக்களை ஏற்றுக்கொண்டு நிறை குறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனது கட்டுரைகள், சினிமா பார்வைகளைப் பற்றி எந்த சமரசமும் இல்லாமல் என்னிடம் விவாதித்து மேலும் எனது எழுத்தை செழுமை படுத்தும் சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் எனது சிறப்பு நன்றிகள். எனது ஒவ்வொரு பதிவையும் படித்துவிட்டு என்னிடம் தனியாக விவாதிக்கும் எனது அக்காவிற்கு ஒரு சிறப்பு வணக்கம் [‘பொன்னியின் செல்வனை’ என் கையில் கொடுத்து நான் தீவிரமாக புத்தகம் படிக்க முதல் புள்ளி வைத்தவரே அவர்தான்]. பதிவு எழுத தொடங்கி இடையில் சிறிது தேக்கம் ஏற்பட்டபோது வேண்டிய ஊக்கம் அளித்து என்னை தொடர்ந்து எழுத தூண்டிய எனது தோழிக்கு இங்கே எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இணையத்தில் பலரது பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வந்த நிலையில் என்னுள்ளும் எழுத வேண்டும் என்ற ஆசை மெல்ல எழுந்தது. குறிப்பாக ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், உண்மைத் தமிழன், லக்கி லுக் ஆகியோரது பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தேன். அதுவும் ஒவ்வொரு பதிவுக்கும் சுடச்சுட கிடைக்கும் பின்னூட்டங்கள் மிக சுவாரஸ்யம். எழுத்துக்கு மிக முக்கியமான அங்கீகாரம் பாராட்டுதானே!! அதுவும் உடனுக்குடன் கிடைக்கும் என்கிறபோது எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் தீவிரமாகியது.

இந்த நேரத்தில் நான் எழுத தொடங்கிய அந்த முதல் கனத்தை நினைத்து பார்க்கிறேன். அலுவலகத்தில் வேலையில்லாத ஒரு நாளில் சர்தார்ஜிக்கள் பற்றி நான் எழுதியதே முதல் பதிவானது. அதை ஒரு பதிவாக இணையத்தில் பார்த்த தருணம் இன்றும் மறக்க முடியாது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். அடுத்து நிதானமாக யோசித்து எழுதிய பதிவு திருநங்கைகள் பற்றியது. அப்புறம் சோம்பலின் உச்சத்தில் இருந்ததால் 2009-இல் எதுவும் எழுதவில்லை. பின்னர் 2010-இல்தான் மெல்ல மீண்டும் எழுத வந்தேன். அதுவும் தீவிரமாக இல்லாமல் சினிமா, சிறு சம்பவங்கள் என்றே எழுதினேன்.

2011-இல்தான் நான் பதிவுகள் எழுதுவதில் கொஞ்சம் தீவிரமானேன். அதுவும் சினிமா பற்றி எழுதியிருந்தாலும் நான் முதல் முயற்சியாக சிறுகதைகள் எழுதியது இப்போதுதான். அதிலும் ‘குட்டிம்மா’ சிறுகதை எனக்கு பல பாராட்டுக்களை கொண்டு வந்தது. ஒரு அதிகாலைப் பொழுதில் என் அண்ணி போனில் என்னை அழைத்து ஒரு அரை மணி நேரம் ‘குட்டிம்மா’வைப் பற்றி என்னிடம் சிலாகித்துப் பேசினார். இது போன்ற பாராட்டுக்காகத்தானே எழுத வந்தேன். நானும் சரியான வழியில்தான் போகிறேன் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.

அதன் பின்னர் அரசியல் பற்றியும் எழுதினேன். அரசியலைப் பொறுத்தவரை அதன் ஆழம் வரையில் எல்லாம் எனக்கு அனுபவமில்லை. ஒரு குடிமகனின் பார்வையில் மனதிற்கு நல்லது, கெட்டது என்று தோன்றியவற்றை எந்த சமரசமும் இல்லாமல் நேர்மையாகவே எழுதி வருகிறேன்.

இவை அனைத்திலும் முக்கியமானது மெரினாவில் ஈழ மக்களுக்காக ஜூன்-26இல் நடந்த நினைவேந்தலையும், முல்லைப் பெரியாறு அணையை காக்க நடந்த பேரணியையும் பதிவு செய்தது. கிட்டத்தட்ட ஒரு பத்திரிக்கையாளன் போல அனைத்து நிகழ்வுகளையும் படம் எடுத்து, வேண்டிய குறிப்புகள் எடுத்து மொத்த நிகழ்வையும் ஒரு பதிவாக எழுதி பதிவேற்றிய அந்த தருணம் மிகப் பெருமையாக உணர்ந்தேன்.

நான் எழுதிய இந்த 50 பதிவுகளில் எல்லாமே நல்ல பதிவுகள் என்று மனம் ஒப்பவில்லை. சரிபாதியாக கழித்துவிட்டு பார்த்தால் கூட ஒரு 25 பதிவுகள் நல்ல எழுத்தில் சேரும் என்று தோன்றுகிறது. நான் எழுதிய ஒவ்வொரு எழுத்துக்கும் பாராட்டி, குட்டி, கூகிள், முகநூலில் பகிர்ந்து பலருக்கும் எனது எழுத்தை அறிமுகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை எனக்கு கிடைத்த பாராட்டுக்கள், குட்டுகள் என அனைத்தையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் மனதோடு வைத்து அடுத்த இலக்கை நோக்கி எனது எழுத்துப் பயணத்தை தொடர்கிறேன்.

எனது எழுத்துக்களை உலகம் முழுக்க எடுத்து சென்ற தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ் குழுவினருக்கு எனது நன்றிகள்.

 
அன்புடன்,

நல்லவன்

4 comments:

நல்லவங்க...

ShareThis