February 05, 2012

மெரினா


சென்னையின் நிரந்தர அடையாளம். எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத இடம். ஒவ்வொரு தடவை செல்லும்பொழுதும் புதுவிதமான அனுபவங்களை அள்ளித் தரும் இடம். ஊரிலிருந்து வருபவர்களுக்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் முதல் இடம் பிடிப்பதும் இந்த இடம்தான். அதுதான் மெரினா. இதுவரை மெரினாவில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படங்களில் வந்து போயிருக்கும். ஆனால் மெரினாவே முழு கதைக்களமாகக் கொண்ட முதல் படம் இதுதான். பலரால் வெறும் கொண்டாட்டங்களுக்கான இடமாக பார்க்கப்பட்ட இடம் ஒரு சாராருக்கு வாழ்வளிக்கும் இடமாகவும் இருக்கிறது. அப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்வுநிலை அங்கு இருக்கும் சிறுவர்கள், மெரினா கடற்கரை பற்றிய முழு நீளப் பதிவுதான் ‘மெரினா’.

அப்பா, அம்மாவை இழந்து சித்தப்பாவின் கொடுமை தாளாமல் ஊரை விட்டு சென்னைக்கு வருகிறான் அம்பிகாபதி, வெண்தாடி தாத்தா, நண்பனாக வரும் கைலாசம், போட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு பின்னர் friendship வைத்துக் கொள்ளும் சிறுவர்கள், இவர்களுக்கு uncle-ஆக வரும் தபால்காரர், பாட்டு பாடி டோலக் அடிக்கும் நபர், அந்த பாட்டுக்கு நடனம் ஆடி பிச்சை எடுக்கும் சிறுமி, கடலை வாடகைக்கு விட்டிருப்பதாக சொல்லும் மன நலம் குன்றியவர், குதிரை ஓட்டுபவர், இதனிடையே வருகிறது சிவகார்த்திகேயன்-ஓவியாவின் காதல் கதை என்று படத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள கதாபாத்திரங்கள்.


அம்பிகாபதியாக ‘பக்கடா’பாண்டி. படிப்பின் மீது தீராத ஆசை. அதற்காக டுடோரியலில் சேர்வதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உற்றத் தோழனாக வரும் கைலாசம். இவர்கள் இருவரின் நட்பு மற்றும் மற்ற சிறுவர்களின் கதாபாத்திரங்கள் மிக அருமையாக உள்ளது. ‘நாம ரெண்டு பேரும் friendship வெச்சுக்கலாமா?’ என்று பக்கடா அனைவரிடமும் நட்பாக பழகுவது இனிமை. இவர்களுக்கு வளர்ந்த தோழனாக வருகிறார் தபால்காரர். சுப்ரமணியபுரத்தில் வரும் சித்தன்தான். முதலில் விளையாட்டாக ஆரம்பித்து, cricket-இல் chief guest என்று நெருக்கமாகி கடைசியில் பக்கடாவை தத்தெடுத்து படிக்க வைக்கிறார்.

அப்புறம் அந்த வெண்தாடித் தாத்தா. ஊரில் மருமகள் தன்னை பேசிவிட்டாள் என்று வீட்டை விட்டு வந்து தன் மகனையும், மருமகளையும் அவமானப்படுத்த பிச்சை எடுத்து வாழ்பவர். தன் அருகே வந்து அமர்ந்தவனிடம் ‘சாப்பிட்டியா?’ என்று கேட்டு, உடனே தன் உணவை பகிர்ந்துக் கொள்வதும், பணம் கேட்கும் சிறுவர்களிடம் ‘பிச்சைக்காரங்கிட்டயே பிச்சையா?’ என்பதும், ‘நான் உனக்கு சாப்பாடு வாங்கி தரேன் தாத்தா. இனிமே பிச்சை எடுக்காதே!!’ என்று பக்கடா கூறியதும் பிச்சை எடுத்த காசை தூக்கி வீசிவிட்டு அடுத்த நாளில் புல்லாங்குழல் விற்கத் தொடங்குவது என மனம் கவர்கிறார். தபால்காரர் சிறுவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கொடுக்கும்போது தனக்கும் கொடுக்க மாட்டாரா என்று எதிர்பார்ப்பது, அவரே தன் மகள் திருமண அழைப்பிதழை சிறுவர்களுக்கு கொடுக்கும்போது தனக்கும் கொடுக்க மாட்டாரா என ஏக்கப் பார்வை பார்ப்பது என பல இடங்களில் நல்ல நடிப்பு. அதுவும் கடைசியில் தன் தவறு உணர்ந்து அந்த சிறுவர்களிடம் வெடித்து அழும்போது கலங்க வைக்கிறார்.


டோலக் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் அப்பா-மகள். இவர்களைப் போன்றவர்களை சென்னை ரயில்களில், கடற்கரையில் என்று பல இடங்களில் அடிக்கடி பார்க்கலாம். கையில் ரெண்டு ஓட்டு சிலை வைத்துக்கொண்டு மிக அருமையாகப் பாடுவார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் வகையில் இருப்பவர்கள், அந்த மக்களைப் போலவே பாடினால்தானே யதார்த்தத்துக்கு அருகில் உணர முடியும். சினிமா பாடல் பின்னனியில் ஒலிக்க இவர் வாயசைத்திருப்பது படத்துடன் ஒன்றாமல் செய்துவிடுகிறது. நாம் கேட்டு ரசித்த பாடல்கள், இவர்கள் போன்ற மக்களின் குரலில் அதே இனிமையுடன் கேட்க மிகவும் நன்றாக இருக்கும், இது நம்ம படம்டா என்று படம் பார்ப்பவர்களை உணர வைக்க வேண்டும். அந்த உணர்வை இங்கே இழந்தது போல இருக்கிறது.

மன நலம் குன்றியவராக வருபவர் குரல் மூலம் மெரினா கடற்கரையின் குரலாக பல இடங்களில் உருவகப் படுத்தியிருப்பது மிக நல்ல உத்தி. கள்ளக் காதலியிடம் பேசுபவனை ‘என் இடத்துலேயே அசிங்கம் பண்றியா?’ என்று உதைப்பதும், துணி போர்த்திக்கொண்டு காதல் செய்பவர்களை காறி உமிழ்ந்து திட்டுவதும், கண்டபடி குப்பை போடுபவர்களை முறைத்துவிட்டு குப்பைகளை அகற்றுவதும், காதல் தோல்வியில் பிதற்றுபவனுடன் கை தட்டி சிரிப்பதும் என்று ஒவ்வொரு காட்சியிலும் மெரினாவின் குரலாகவே தோன்றுகிறது. மிக மிக அருமையான உருவகம்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது போலீஸ்காரரின் மகன் கைலாசம் தலையில் கொட்டும் காட்சி. படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி அது. குழந்தை மனநிலையை உள்ளபடியே காட்டியிருக்கிறார் இயக்குனர். அடுத்தது குழந்தைகள் காப்பகத்தில் ஜெயப்ரகாஷ் படித்தால் எப்படி இருக்கலாம் என்று அந்த சிறுவர்களுக்கு விளக்குகிறார். பக்கடா உள்ளே இருந்து அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் கைலாசம் ஜன்னல் வழியே இதை பார்க்கிறான். கைலாசத்தை பார்க்கும் பக்கடா நீயும் உள்ள வாடா, படிக்கலாம் என்று அழைக்க அவன் மறுக்க பின்னனியில் படிப்பின் அருமை பற்றி ஜெயப்ரகாஷ் விளக்கம் ஒலிக்க என்று இன்றைக்கு கல்வி மறுக்கப்பட்ட சிறுவர்களின் மனப் போராட்டத்தை மிக அழகாக பதிவு செய்த காட்சி அது. பின்னர் அனைவரும் தாத்தாவின் முயற்சியாலும், தபால்காரரின் உதவியோடும் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் கண்களில் தெரியும் சந்தோஷம். அருமையான காட்சிகள்.


படத்திற்கு மிகவும் கலகலப்பு சேர்ப்பது சிவகார்த்திகேயன்-ஓவியாவின் காதல் கதைதான். என் சென்னை நண்பர்கள் மூலம் நான் அறிந்திருந்த பல கதைகளின் தொகுப்பாகவும், இன்றைய அவசர உலகின், அவசர காதலின் பதிவாகவும் இருந்தது அவர்கள் காதல் கதை. தனக்கும் ஒரு figure வேண்டும் என்று இல்லாத சாகசம் செய்து ஓவியாவை மடக்குவது, அதற்காக அவர் செய்யும் செலவுகள் எல்லாம் காட்டப்படும் குட்டி குட்டி animations என்று அவர்கள் காட்சிகள் செம ரகளை. காதலில் எந்த ஈர்ப்பும் இல்லாமல் பின்னர் வெத்து காரணங்களால் பிரிந்து ஆப்பு, ரிவிட், பன்னாடை என்று கலாய்க்கும் இடங்கள் அட்டகாசம்.

படத்திற்கு பெரும்பலம் தருவது ஒருவரி வசனங்கள், நகைச்சுவை கலந்த காட்சிகள், ஒளிப்பதிவும்தான். உதாரணம் ஓவியாவின் பெயர் சொப்பனசுந்தரி என்று அறிந்ததும் நாயகனின் நண்பனுக்கு கரகாட்டக்காரன் காட்சி நினைவுக்கு வருவது. இதுபோல பல காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. அப்புறம் ஒளிப்பதிவு. சிறுவர்களுக்கிடையே நடக்கும் ஒட்டப் பந்தயம் காட்சிப்படுத்திய விதம் மிக அருமை. தன்னை கடந்து செல்பவனை பார்த்ததும் வருகிற முக மாற்றம் மிக அற்புதம். சிறுமிகள் மணலை அள்ளி விளையாடும்போது தெரிகிற ஒவ்வொரு மணல் துகள்களும் அற்புதம். நேர்த்தியான ஒளிப்பதிவு. அப்புறம் கடைசியில் வரும் குதிரைப்பந்தயம். சம தளம், கடலிலிருந்து, மேலிருந்து என்று பல கோணங்களில் காட்டப்படும் அந்த பந்தயம் நம்மையும் அவர்களுடனே ஓட வைக்கிறது. அறிமுக ஒளிப்பதிவாளர் விஜய்க்கு வாழ்த்துகள்.

 

 இசை - கிரிஷ் (அறிமுகம்). ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ பாடல் கேட்டவுடனே மனம் சட்டென்று ஈர்க்கிறது. இன்று சென்னையில் இருக்கும் பெரும்பாலானோர் ஊர்நாட்டில் இருந்து வந்தவர்களே!! அந்த வகையில் அனைவரையும் மனதிற்கு நெருக்கமாக உணர வைக்கும் பாடல். மற்ற பாடல்கள் காட்சிக் கோரையுடன் வருவதால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை ரொம்ப சுமார். அதுவும் தாத்தா தவறு உணர்ந்து புலம்பும் காட்சியில் வரும் பின்னணி இசை அந்த காட்சியின் ஆழத்தையே குறைக்கின்றது.

மெரினா கடற்கரை பற்றிய பதிவில் சிறுவர்களுக்கு கல்வி அவசியம் என்று இயக்குனர் கூற முனைந்திருக்கிறார். படத்தில் பெரும்பாலும் நல்ல சிந்தனைகளையே பதிவு செய்ய முயன்றிருப்பது தெரிகிறது. ஆனால் கடற்கரையில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு ஈடாக நிழல் காரியங்களும் நடக்கின்றன. அதை ஓரிரு காட்சிகளில் பதிவு செய்திருந்தால்தானே சொல்ல வந்த நல்ல விஷயங்கள் ஆழமாகப் பதியும். படத்தில் முதல் குறையும் அதுதான். அடுத்து திரைக்கதை. மெரினா போன்ற கதைக்களத்தில் எவ்வளவோ விஷயங்கள் சேர்த்து இன்னும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கலாம். சுருக்கமா சொல்லனும்னா அடிச்சு ஆடியிருக்கலாம். ஆனால் கபடியில் ஏர்க்கோட்டை மட்டுமே தொட்டு வருவது போல இருக்கிறது. ஊரில் இருந்து ஓடி வரும் சிறுவர்கள் கடற்கரையில் ஏதேனும் விற்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை விதைப்பதுபோல உள்ளது. ஆனால் உண்மை நிலைமை அவ்வாறு இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அப்புறம் குழந்தைகளை மீட்டு கல்வி கொடுக்கும் அதிகாரியாக ஜெயப்ரகாஷ் வரும் காட்சி. அவர் சிறுவர்களுடன் பேசும் உரை மனதை அவ்வளவாகத் தொடவில்லை. மிகவும் உயிர்ப்புடன் வந்திருக்க வேண்டிய காட்சி. அந்த வசனத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

முழுக்க, முழுக்க மெரினாவை மட்டுமே மையப்படுத்தி, அங்கு தினமும் காணப்படும் நபர்களை பதிவு செய்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். அதுவும் இளம் வயதில் கல்வி மட்டுமே முக்கியம் என்பதை கதை போக்கில் மிக அழகாக உணர்த்தியபடியே செல்கிறார். எப்படி ‘அங்காடித் தெரு’ படம் மூலம் அடுக்கு மாடி கடைகளில் வேலை செய்பவர்களை அன்புடன் அணுக வைத்ததோ, அது போல இனி பிச்சைக்காரர்களையும் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களையும் எரிச்சலில் விரட்டாமல் அன்போடு அணுக வைக்கிறது ‘மெரினா’. நாம் அன்புப் பார்வை வீசும் அந்த கணத்தில்தான் உண்மையிலேயே இயக்குனர் பாண்டிராஜ் வெற்றிப் பெறுகிறார்.


அரங்கம் பக்கம்:

1. படம் முடிந்து பெயர் போடுகையில் “தமிழ்த்தாய் வாழ்த்து” போட்டார்கள். ஒருவருக்கும் அந்த பாடல் முடியும் வரையில் யாருக்கும் நிற்கும் பொறுமை இல்லை. நின்று என்னை கவனித்த என்னையும் பின்னாலிருந்தவர்கள் நெட்டி வெளிய தள்ளி விட்டார்கள்.

2. “You guys can’t use the media for telling such silly message..” என்று படம் பார்த்த ஒருவன் peter விட்டுக்கொண்டிருந்தான். ஓங்கி முகத்திலேயே ஒரு குத்து விடலாமா என்று தோன்றியது. சரி!! இந்த மாதிரி ஊருக்கு நாலு பேர் இருக்காங்க. எல்லோரையுமா அடிக்க முடியும். அமைதியாக வந்துவிட்டேன்.

3 comments:

  1. விரிவான அருமையான விமர்சனம்
    படத்தை பார்க்கத் தூண்டுகிறது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. கெளம்புடா தேயேட்டேர்க்கு !!


    நேரமிருந்தால் இங்கு வரவும் ..
    http://sathivenkat.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis