February 20, 2012

அம்புலி 3D - வரலாற்றுப் புனைவில் ஓர் கருப்புச் சட்டை




 
நம்மில் பெரும்பாலானோர் முதன்முதலில் முப்பரிமானத்தில் பார்த்த திரைப்படம் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’. அதன் பின்னர் அனைவரையும் சென்று அடையும் வகையில் வந்த திரைப்படம் ‘அவதார்’. வந்த வேகத்தில் வசூலையும் வாரிக் குவித்தது. மெல்ல திரைப்பட ரசிகர்களிடையே 3D மேல் ஒரு மோகம் வர ஆரம்பித்தது. சாதாரணமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கூட 3D சட்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தன. இருந்தாலும் ‘அவதார்’ ஏற்படுத்திய தாக்கத்தை எந்த திரைப்படங்களாலும் ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை நாம் பார்த்த 3D படங்கள் அனைத்தும் தமிழ் படுத்தியவையே அன்றி நேரடியாக தமிழில் எதுவும் வரவில்லை.
 
 
 
இதோ..!! நேரடியாக நாம் பெருமைப்படும் வகையில் நம் தமிழில் ஒரு 3D படம். ஒரு திகில் படத்துக்கு தேவையான கதை, தெளிவான திரைக்கதை, தேர்ந்த நடிகர்கள் என வேண்டிய அனைத்தையும் கொண்டு ஒரு அழகான 3D படத்தை நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கர் & ஹரேஷ் நாராயண். வாழ்த்துகள். ஆனாலும் இந்த படத்துக்கான முதல் பூங்கொத்து பெறுபவர் ஒளிப்பதிவாளர் சதீஷ் அவர்கள். 3D படத்துக்கான துல்லியமான காட்சியமைப்புகள், குறிப்பாக இரவு நேரக் காட்சிகள் கூட 3Dயில் தெளிவாக இருக்கும்படி காட்சிபடுத்திய விதம். மிக நன்று. கண் முன்னே வரும் பாம்பு, சோளக்கொல்லையின் தட்டைகள், கண்ணை குத்த வரும் பார்த்திபனின் ஈட்டி என ஒவ்வொன்றும் 3D அட்டகாசம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.

 
 
அமுதனும் பாரிவேந்தனும் நண்பர்கள். கல்லூரி விடுமுறையில் தனது காதலியை சந்திப்பதற்காக அவள் ஊரான பூமாடந்திபுரம் செல்கிறான் அமுதன். கல்லூரியில் இருந்து அவள் ஊருக்கு ஊரைச் சுற்றி செல்ல வேண்டும் அல்லது ஒரு சோளக்கொல்லையை கடந்து செல்ல வேண்டும். ஆனால் பல வருடங்களாக அம்புலி என்ற மிருகம் அந்த சோளக்கொல்லை வழியே செல்வோரை அடித்து கொன்று விடுவதால் அந்த வழியை யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும் ஊரின் எல்லையில் ஒரு தடுப்பு சுவர் எழுப்பி அதை தாண்டாமல் ஊர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது எதுவும் அறியாத அமுதன் அந்த ஊருக்கு சென்று காதலியை சந்தித்து திரும்பும் வேளையில் அம்புலியால் துரத்தப்பட்டு தப்பிக்கிறான். பின்னர்தான் நண்பர்கள் இருவருக்கும் அம்புலி பற்றி தெரிய வருகிறது. இதுவரை அம்புலியை யாரும் பார்த்திராதலால் அதை பற்றி அறிய கிளம்புகிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் விசாரணையில் முடிவு என்ன? அம்புலி யார் என்ற கேள்விகளுக்கு திகிலுடன் அமர வைத்து பதில் சொல்லியிருக்கிறார்கள்.
 
 
 
படம் பார்த்தவுடன் எனக்கு படத்தை பற்றி “வரலாற்றுப் புனைவில் ஓர் கருப்புச் சட்டை” என்றுதான் தோன்றியது. இதுவரை வந்த படங்களில் என்னதான் பகுத்தறிவு பேசினாலும் கடைசியில் அந்த கதாபாத்திரம் தன் கஷ்டத்தை தீர்த்தது கடவுள்தான் என்று கட்சி மாற்றி மொத்ததையும் காலி பண்ணி விடுவார்கள். ஆனால் இதிலும் ஒரு பகுத்தறிவுவாதி வருகிறார். பிரச்சாரம் என்று எதையும் செய்யாமல் ஊரில் மக்களிடம் இருக்கும் பயத்தை போக்க அம்புலி விஷயத்தை பகுத்தறிவோடு அணுகுகிறார். படம் கடைசியில் மக்கள் கடவுளுக்கு பூஜை செய்தாலும் இவரது பேச்சில் இருக்கும் உண்மையை நம்பி அதன்படி நடப்பது அவ்வளவு யதார்த்தம். நான் பெருமையாக உணர்ந்த இடம் இது. எந்த நொண்டிச் சாக்கும் சொல்லாமல் கதாபாத்திரங்களை அதனதன் போக்கில் வடித்திருப்பது மிக அருமை.
 
 
நடிகர்களில் முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர் ‘மைமிங்’ கலைஞர் கோகுல்நாத். அது ஏன் என்று படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். நடிகர் பார்த்திபன் ஒரு சிறிய, முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். ஆனால் அவரது முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்குள் படம் முடிந்துவிடுவது சோகம். இவரது கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் கவனமாகவும், கனமாகவும் அமைத்திருக்கலாம். மற்ற நடிகர்களான ராஜேந்திரன், ‘நண்டு’ ஜெகன், கலைராணி, உமாரியாஸ், தம்பி ராமைய்யா என அனைவரும் அவர்கள் பங்கை சரியாக செய்து கதை ஓட்டத்திற்கு நன்றாகவே துணை புரிந்திருக்கிறார்கள். நண்பர்களாக வரும் அஜய் மற்றும் ஸ்ரீஜித். கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
 
 
 படத்தின் பலம் முதல் 10 நிமிடங்களில் வசனமே இல்லாமல் வரும் காட்சிகள், தெளிவான ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை. படத்தின் பெயர் போடும்போதே கதையின் அமைப்பை நிழல் காட்சிகளாக காட்டியிருப்பது அற்புதம். அப்புறம் அம்புலி பற்றி கிடைக்கும் தகவல்களை ஓவியங்கள் போல சித்தரித்து காட்டி, பின்னர் உண்மை நிலை அறியும்போது அவையே காட்சிகளாக விரிவது அமர்க்களம். ஆனால் இவ்வளவு பலம் இருந்தும் பின்பாதியில் வரும் திரைக்கதையில் உள்ள தொய்வு சற்று அயர்ச்சி ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இதுதான் காரணம் என்று காட்டப்படும் வேளையில் திரைக்கதையில் ஒரு வேகம் இருக்க வேண்டும். ஆனால் அது இங்கே இல்லை. படத்திற்கு 5 பேர் இசை அமைத்திருக்கிறார்கள். பாடல்கள் படத்திற்கு பெரிய பலவீனம். இதுபோன்ற திரைக்கதைக்கு பாடல்கள் இல்லாமல் இருந்தாலே மிக அருமையாக இருந்திருக்கும். இந்த படத்திற்கு பாடல்கள் ஒரு மிகப்பெரிய தடைக்கல். ஆனால் பின்னணியிசை திகில் படத்திற்கு வேண்டிய உணர்வை கொடுக்கவே செய்கிறது.

மற்றபடி தெளிவான திரைக்கதை, நாம் சிறுவயதில் பாட்டியிடம் கேட்டு வளர்ந்த கதையை தேர்ந்த தொழில்நுட்ப உதவியுடன் மிக அருமையாக நமக்கு அளித்த அம்புலி இயக்குனர்களுக்கும், படக்குழுவினருக்கும் முக்கியமாக இது போன்ற புது முயற்சிக்கு ஊக்கமளித்து தயாரித்த தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். 
 
 

2 comments:

  1. காலை வணக்கம் ..சரியான விமர்சனம்....பாடல் இல்லை என்ன்றால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்...

    ReplyDelete
  2. பாஸ்,
    ரொம்ப நல்ல விமர்சனம்....படம் தமிழ்லில் ஒரு சிறந்த முயற்சி.

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis