December 29, 2011

என்றென்றும் ராஜா – உண்மையான 'ராஜ'பாட்டை

நிகழ்ச்சியை காண தொலைக்காட்சி முன் தவம் இருக்க வேண்டியதில்லை, Remote யார் கையில் என்ற சண்டை இல்லை, ‘அடுத்து வருவது’ என்ன என்று விளம்பரம் முடியும் வரை காத்திருக்க தேவையில்லை, முக்கியமாக விளம்பரங்களின் தொல்லை இல்லவே இல்லை [நிகழ்ச்சி தொடங்கும் வரை அங்கிருந்த பெரிய திரைகளில் விளம்பரங்கள் காட்டினார்கள். அது கணக்கில் வராது], முக்கியமாக மீதி நிகழ்ச்சியையும் காண அடுத்த வாரம் வரையில் காத்திருக்க தேவையில்லை. மொத்தமாக தொடர்ந்து 6 மணி நேரம் இளையராஜாவின் கச்சேரி கேட்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவோமா? எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
 
நேற்று மாலை [28-12-2011 புதன்கிழமை] நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை கையில் பார்த்தவுடன் ஏதோ இனம் புரியாத மனதுக்குள் ஓடியது. ஊர் திருவிழாக்களில் நகல்களின் கச்சேரிகளை மட்டுமே பார்த்திருந்த நான், இப்போது அசலின் கச்சேரியை அனுபவிக்கப் போகிறேன். சிறுவயதில் அம்மா, தாத்தாவின் தாலாட்டுக்குப்பின் இளையராஜாவின் பாடல்கள்தானே என்னை தாலாட்டியது. அவர் இசையோடு இணைந்து வளர்ந்தவன் நான். எனக்கு இன்னமும் இசையை பற்றி ஒண்ணும் தெரியாது. ராகம், தாளம், பல்லவி, சரணம் என்று ஏதேதோ சொல்வார்களே!! உண்மையாக இந்த பெயர்களைத் தவிர அதன் ஆதாரம் எதுவும் தெரியாது. தெரியாததுதான் எனது பலம் என்று நினைக்கிறேன். எந்த ராகம் என்று எதையும் ஆராயாமல், பாடலைக் கேட்டவுடன் ரசிக்க மட்டுமே செய்வது பலம்தானே!!!

நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கியது. நடிகர் பிரகாஷ் ராஜ் வந்திருந்த அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த முறை Hungary நாட்டை சேர்ந்த இசைக்குழுவினரும் வந்திருந்தனர். இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் அவர்களுக்காக தங்களின் 3 இசைக்கோர்வையினை அற்பணித்தார்கள். அடுத்து இளையராஜா பற்றிய காட்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னர் வந்த பாடகிகள் அனைவரும் சுர வரிசை [அது என்ன பாடல் என்று தெரியவில்லை. ஆனால் மிக நன்றாக இருந்தது] பாடினார்கள். பாடலின் முடிவில் ‘ஓம்காரம்’ பாடியபடி மேடைக்கு வந்தார் இசைஞானி இளையராஜா. பிரகாஷ் ராஜ் முதலிலேயே “இதுவரை பல நிகழ்ச்சிகளில் நிறைய பேசிவிட்டோம். அதனால் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு தொடர்ந்து பாடல்கள்தான்.” என்று அறிவித்துவிட்டார்.

இளையராஜா மேடைக்கு வந்ததும் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு, தான் நண்பனை அழைத்தார். “என்னுடன் எப்போதும் இருக்கும் ஒரே நண்பன்” என்று ஆர்மோனியப் பெட்டியைக் கொண்டுவந்து கீழே அமர்ந்து கொண்டார். எதிர்பார்த்தது போலவே முதல் பாடலாக “ஜனனி...!! ஜனனி...!!!” பாடலை பாடினார். நான் அனுபவித்த பரவச அனுபவத்தின் தொடக்கமாக இருந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இளையராஜாவின் குரலுக்காகவே அந்த பாடலை அடிக்கடி கேட்பேன். பாடல் முடியும் வரையில் அமைதியாக இருந்த அரங்கம், பின்னர் எழுப்பிய கரவொலி அடங்க கொஞ்ச நேரம் ஆனது. அடுத்த இரு பாடல்களும் ‘அம்மா’ பாடல்களாக அமைந்தது. அதில் முதலாவதாக K.J.யேசுதாஸ் அவர்கள் “அம்மா என்றழைக்காத...!!” பாடலை பாடினார். அடுத்து SPB அவர்கள் “நானாக நானில்லை தாயே..!!!” பாடலை பாடினார். இந்த பாடலைப் பாடுவதற்கு முன் இளையராஜாவின் துணைவியார் திருமதி.ஜீவா பற்றிய ஒளித்தொகுப்பை காட்டி அவருக்கு சமர்ப்பணம் செய்தார்கள்.
பாடல் முடிந்ததும் பிரகாஷ் ராஜ், சிம்பொனியைப் பற்றி கூறுமாறு கேட்டார். ‘அதை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது?’ என்று யோசித்தவர், தனது குழுவினருக்கு சில குறிப்புகள் கொடுத்த சில நொடிகளில் இசைக்கப்பட்டது. மேற்கத்திய இசை போல தோன்றினாலும் இசையின் முடிவில் “இதயம் போகுதே..!!” பாடலோடு அவர் முடித்த விதம்... யப்பா!! வாய்ப்பே இல்லை. அசத்தல். அடுத்து சில பாடல்களில் இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். “நான் உங்களுக்காகத்தான் வந்திருக்கேன். நீங்க போதும்னு சொல்ற வரைக்கும் நான் பாடுவேன். ஆனா நீங்க இப்படி சத்தம் போட்டீங்கன்னா எங்களாள பாட முடியாது. நீங்க இந்த மாதிரி சத்தம் போடுறத்துக்கு வேற மாதிரி கச்சேரிகள் இருக்கு. இது அப்படி இல்லை. அதனால் பொறுமையாக பாடலைக் கேட்டு இசையை அனுபவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

“இதயம் ஒரு கோயில்...” பாடும்போது வயலின் குழுவினரின் [31 சின்ன வயலின், 2 பெரிய வயலின்] ஒருமித்த இசை, எந்த பிசிறும் இல்லாமல் கோர்வை மிக அற்புதமாக இருந்தது. காதலிக்காகப் பாடப்பட்ட பாடல், நேற்று அதன் அர்த்தம் ரசிகனை நோக்கியே இருந்தது. அடுத்து கமல் வீடியோ மூலம் தனது வாழ்த்துகளைக் கூறினார். “அவர் வாழ்ந்த காலத்தில் நானும் இருக்கிறேன். பழசாக இருந்தாலும் உண்மை அதுதான். இன்னும் எத்தனை மேடைகளில் வேணும்னாலும் சொல்வேன்.” என்றார். அதை ரசிகர்களும் கரவொலி மூலம் ஆமோதித்தனர்.

பாடகர்கள் K.J.யேசுதாஸ், SPB, ஹரிஹரன், கார்த்திக், யுவன், ஹரிசரன் பாடகிகள் சித்ரா, ரீட்டா, உமா ரமணன், பிரியா [இன்னும் சிலரது பெயர்கள் தெரியவில்லை. மன்னிக்கவும்] என தொடர்ந்து பாடியபடி இருந்தார்கள். பெரும்பாலான பாடல்கள் 80-90 களின் பாடல்களாகவே இருந்தது. “ஆயிரம் மலர்களே மலருங்கள்..!!” பாடல் ‘மலேசியா’ வாசுதேவன் அவர்கள் நினைவாக பாடப்பட்டது.

இளையராஜா கீழே விருந்தினர் பக்கம் நோக்கி, “அண்ணா! மேடைக்கு வர்றீங்களா??” என்று கேட்க, பலத்த கரவொலிக்கிடையில் பாலமுரளிகிருஷ்ணா மேடையேறினார். இளையராஜாவை பாராட்டி பேசிய உடன் பாடுவதற்கு தயாரானார். அவரது குரலால் தனிச் சிறப்பை சேர்த்த “சின்ன கண்ணன் அழைக்கிறான்..” பாடலைப் பாடினார். [ஒரு சின்ன flashback: இளையராஜாவின் முந்தைய இசை நிகழ்ச்சியில் இதே பாடலை யுவன் மற்றும் கார்த்திக் பாடிய விதத்தை விகடன் பலமாகவே குட்டியிருந்தது.] அதனால் நான் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். தனது கரகரப்பான, சிறு நடுக்கம் கலந்த குரலில் அவர் பாட ஆரம்பித்ததும் “இதைத்தானே எதிர்பார்த்தோம்..!!” என்று கத்த தோன்றியது. இசையனுபவம் என்று சொல்வார்களே!! இந்த பாடலில் அதை நிச்சயம் அனுபவிக்கலாம்.

அடுத்து K.J.யேசுதாஸ் , “A song from my Heart” என்று கூறி “பூவே!! செம்பூவே!!” பாடலை பாடினார். மற்ற பாடல்களில் சிறிது பிசிறு தட்டிய அவரது குரல், இந்தப் பாடலில் மிகச் சரியாக அமைந்திருந்தது. ஆனாலும் timing கொஞ்சம் தவறியதால் பாடலை இடையில் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார். இந்தப் பாடலிலும் வயலின் குழுவினரின் இசைக் கோர்வை அபாரம். நிகழ்ச்சி முழுக்க அதிக பாராட்டுக்கள் வாங்கியவர்கள் இவர்கள்தான்.

இளையராஜாவும் சித்ராவும் இணைந்து “நான் தேடும் செவ்வந்திப் பூவிது...” பாடலை பாடினார்கள். எனக்கு என்றென்றும் விருப்பமான பாடல். பாடலின் தொடக்கத்தில் அவர் பாடும் ராகம், அது அவருக்கு மட்டுமேயான அடையாளம். ஆனால் இந்த பாடலும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் போட்ட அதிகமான கூச்சலில், அவருக்கு கொஞ்சம் கோபமே வந்துவிட்டது. “இப்படி சத்தம் போட்டீங்கன்னா எங்களுக்கு சுருதி சேராது. அவங்க என்ன வாசிக்கிறாங்கன்னு தெரியாது. அப்புறம் பாட்டு நல்லா வராது.” என்று கோபமாக கூறினார்.

‘பா’ திரைப்பட இயக்குனர் பால்கி வந்திருந்து இளையராஜாவின் இசையை தனது படத்தின் காட்சியைக் கொண்டு அருமையாக விளக்கினார். பின் தனது பேச்சில் “If you want a magic show, just go to Raja Sir’s Studio” என்றார். இப்போலாம் ‘காப்பி ராகம்’ அதிகமாக இசைக்கப் படுகிறதே!! அவர்களுக்கும் சில யோசனைகள் கூறினார். “நீங்கள் காப்பி ராகம் போடணும்னா அவரோட பாடல்களைத் தொடாதீர்கள். அனைவருக்கும் தெரிந்துவிடும். அவரது பின்னணி இசையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாருக்கும் அதிகமாகத் தெரியாது.” என்று அவர் கூறியதும் அரங்கில் கரவொலியோடு சிரிப்பொலியும் சேர்ந்துக் கொண்டது.

நாட்டுப்புற கும்மி இசையில் அமைந்த “ஆயிரம் தாமரை மொட்டுக்களே..!!” பாடல் ரசிகர்களின் கரவொலியுடன் அமர்க்களமாக ஆரம்பித்தது. SPB-யுடன் இணைந்து பாடிய பாடகி [பெயர் தெரியவில்லை. மன்னிக்க..] S.ஜானகி வரவில்லையே என்ற குறையே தெரியாத அளவுக்கு அருமையாகப் பாடினார். அப்புறம் Hungary குழுவினருடன் இணைந்து இசைத்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் பின்னணி இசை, ‘பூங்கதவே தாழ் திறவாய்...’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி...’ என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அடுத்து அதிக கைத்தட்டல் வாங்கிய பாடல் ஹரிஹரன் பாடிய “என் மன வானில்....” பாடல்தான்.

இளையராஜாவின் ‘இளைய’ராஜா யுவன் மேடையேறியபோது பலத்த கைத்தட்டல். திடீரென்று கமல் போல பேசினார். ‘என்னடா இது?’ என்று பார்த்தால் அடுத்து அவர் பாடிய பாடல் “ராஜா கைய வெச்சா..!!”. அடுத்து பாடியது “நினைவோ ஒரு பறவை..!!”. வழக்கம்போல எந்த அலட்டலும் இல்லாமல் தன் மனம் போல பாடினார். சரி!! எல்லாமே மெல்லிசையாக இருந்தால் நல்லா இருக்குமா? காரமும் இருந்தால்தானே இனிப்பின் ருசி தெரியும். ‘குத்துப் பாடல்’ என்றதும் K.J.யேசுதாஸ் வந்தார். நானும் “தண்ணித் தொட்டி...” பாடலை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் பாடியது “வச்சப் பார்வை தீராதுடி...!!” பாடல். மெல்லிசைத் தாலாட்டில் தூங்கியவர்கள் அனைவரையும் எழுப்பி உட்கார வைத்தார்.

சரி!! எல்லோரும் தனித்தனியாக பாடியாச்சு. அப்படியே போய்டலாமா? K.J.யேசுதாஸ் மற்றும் SPB மேடைக்கு வந்தார்கள். அதேதான்.. அதே பாட்டுதான். “காட்டுக்குயிலு மனசுக்குள்ள...” பாடல் ரகளையாக ஆரம்பித்தார்கள். திடீரென பாடலின் இடையில் SPB, K.J.யேசுதாஸ் காலைத் தொட்டு எழுந்தார். இந்த திடீர் செய்கை புரியாமல் அவரும் வாழ்த்தினார். அப்புறம்தான் தெரிந்தது. அடுத்து SPB பாடிய வரி “போடா எல்லாம் விட்டுத்தள்ளு...”. மரியாதை.

பின்னர் பாடகர்கள் அனைவரும் இணைந்து “இது ஒரு நிலாக்காலம்” பாட, அடுத்து தனது இசைக் கலைஞர்கள், Hungary குழுவினர் அனைவரையும் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். புத்தாண்டு வாழ்த்தாக SPB குரலில் “இளமை இதோ! இதோ!!” பாடலுடன் நிகழ்ச்சி இரவு 12 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

இப்போ நான்:

பொதுவாக நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றதில்லை. அதை பற்றிய சிந்தனையும் வந்ததில்லை. ஆனால் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறி நுழைவுசீட்டையும் ஏற்பாடு செய்த செல்லப்பன் அண்ணனுக்கு [நிகழ்ச்சி முடிய 3 மணியானாலும் சரி, விடிஞ்சாலும் சரி பாத்துட்டுதான் போகணும் என்று கூறிக்கொண்டே இருந்தார்] என் நன்றிகள். அப்புறம் ரசிகர்கள். அனைவரும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார்கள். ஒவ்வொரு பாடல் தொடங்கும்போதும் மேடையை நோக்கி அணைப்பது போல கையை விரித்துக் கொண்டு உணர்ச்சிக் கூச்சலிட்டார்கள். அனைத்திற்கும் ஒரே காரணம். அது இளையராஜா.

இசையால் இவ்வளவு மக்களையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளையராஜா, உண்மையில் தனி ராஜாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது ராஜாங்கத்தில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

கொசுறு:

இந்த பதிவின் தலைப்பிற்கு உதவி செய்த நண்பன் காளீஸ்வரனுக்கு என் நன்றிகள்.


2 comments:

  1. நானும் அங்கே தான் இருந்தேன். நான் facebook இல் டிக்கெட் கிடைத்ததைப் பற்றி போட்டிருந்தேன். நீ கவனித்திருந்தால் நாம் சந்தித்திருக்கலாம். ஒரு வரலாற்று நிகழ்வை தமிழகம் தவறவிட்டது .. :) :)

    நிகழ்ச்சியை பற்றி சொல்லவேண்டும் என்றால் "பூவே செம்பூவே" பாடலுக்கே கொடுத்தக்காசு சரியாப்போச்சு..

    ( தொடரும்) ( கரண்ட் இல்லை )

    ReplyDelete
  2. அதுவும் அந்த வயலின் கலைஞர்கள் கலக்கி விட்டார்கள் , அனைத்துப் பாடல்களிலும் .....

    மொத்தத்தில் ஏமாற்றம் எதுவும் இல்லை...

    அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை இதை விட சிறப்பாகத் தந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
    1 ) ஐந்து மணி முதல் என அறிவித்திருந்தாலும் நிகழ்ச்சி ஆரம்பமானது 6 :30kku மேலே தான். இன்னும் முன்னதாகவே aarambithu
    சற்று சீக்கிரம் முடித்திருக்கலாம். 10 மணிக்கு மேல் மக்கள் கொஞ்சம் சோர்ந்து விட்டார்கள் .... கொஞ்சம் கிளம்பியும் விட்டார்கள். இரவு
    2 ) இன்னும் நல்ல பாடல்களை தேர்வு செய்திருக்கலாம். இதைவிட நல்ல பாடல்கள் எவள்ளவோ உள்ளன.

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis